பின்னணி பாடகர் கேகே மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!


பின்னணி பாடகர் கேகே மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!
x

பிரபல பின்னணி பாடகர் கேகே மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிரபல பின்னணிப் பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் ( வயது 53) மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்த அவர், உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

நேற்று கொல்கத்தாவில் உள்ள ரபீந்திர சதனில் வைக்கப்பட்டு இருந்த பாடகர் கே.கே.வின் உடல். கே.கே. உடலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் அஞ்சலி செலுத்தினார். கே. கே உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவரின் உடல் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு மும்பைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் கேகே மறைவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'பன்முகப் பாடகர் கே.கே.யின் மரணம் குறித்து அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

வசீகரமான, புதுமையான, மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமூட்டக்கூடிய ஆத்மார்த்தமான குரலைக் கொண்டு தனது பாடல்களின் தொகுப்பின் மூலம் கேகே அனைத்து மொழிகளிலும் இதயங்களை வென்றுள்ளார். அவர் தனது கலை மூலம் வாழ்வார்' என்று தெரிவித்துள்ளார்.




Next Story