முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் காப்பது வேதனை அளிக்கிறது


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் காப்பது வேதனை அளிக்கிறது
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் காப்பது வேதனை அளிக்கிறது

தஞ்சாவூர்

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் காப்பது வேதனை அளிக்கிறது என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.

வேதனை அளிக்கிறது

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவையில் நடந்த கார் வெடிப்பில் நல்ல வேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் அதை கொண்டு வந்தவரே பலியாகி இருக்கிறார். ஆனால் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை. காவல்துறைக்கு தலைவராக இருப்பவரே இப்படி மவுனம் காப்பது தமிழக மக்களுக்கு வேதனையும், வருத்தமும் அளிக்கிறது.

போதை கலாசாரம் பெருகுகிறது

இனியாவது தமிழக அரசு தீவிரவாதிகள் விஷயத்தில் கடுமையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. எப்போது ஆட்சிக்கு வருகிறதோ அப்போது எல்லாம் தீவிரவாதம் தலைதூக்க தொடங்குகிறது. அதனால் வாக்கு வங்கி அரசியலை மனதில் கொள்ளாமல் தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பொறுப்பேற்று அரசாங்கம் சிறப்பாக செயல்பட வேண்டும்.

கோவை கார் வெடிப்பு சம்பவம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்துகிற விஷயம். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. போதை கலாசாரம் பெருகி கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில், தமிழ்தான் தாய்மொழி. எந்த மாநிலத்திலும் தாய்மொழிக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழகத்தில் எந்த காலத்திலும் மக்கள் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

பா.ஜ.க. ஈடுபடாது

தமிழ்நாட்டில் 1965-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இந்தி திணிப்பை கொண்டு வந்ததால் தான் இதுவரை ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. அது போன்ற விபரீத முயற்சியில் பா.ஜ.க ஈடுபடாது என நினைக்கிறேன்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பக்குவமாகத்தான் பதில் சொல்ல வேண்டும். அண்ணாமலை இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார். போக, போக நிதானமாகி விடுவார். அவர் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர். இது போன்ற போக்கை கட்சி தலைமை உன்னிப்பாக கவனித்து வருகிறது. எனவே அவர் பொறுமையாக பதில் அளிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story