சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்கள் இன்ஸ்டாகிராம் மூலம் வெளியீடு - சென்னை கல்லூரி மாணவர் கைது


சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்கள் இன்ஸ்டாகிராம் மூலம் வெளியீடு - சென்னை கல்லூரி மாணவர் கைது
x

சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்களை இன்ஸ்டாகிராம் மூலம் வெளியிட்ட சென்னை கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். அமெரிக்க தொண்டு நிறுவனம் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை,

அமெரிக்காவை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று இணையதளங்களில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்களை வெளியிடுவதை கண்காணித்து வருகிறது. அந்த தொண்டு நிறுவனம், கடந்த 2019-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்களை வெளியிட்டதை கண்டுபிடித்தது. அந்த மாணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தற்போது புகார் அனுப்பியது.

தற்போது அந்த மாணவர், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். சென்னை சூளையைச் சேர்ந்த அந்த மாணவர் செந்தில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மீது வேப்பேரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ மற்றும் தகவல் தொழில் நுட்ப முறைகேடு தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அந்த மாணவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. விசாரணை முடிந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்று போலீசார் தெரிவித்தனர். அமெரிக்க தொண்டு நிறுவனம் அளித்த புகார் அடிப்படையில் முதல் முதலாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறினார்கள்.


Next Story