வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை காஞ்சிபுரத்தில் மீட்பு..!


வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை காஞ்சிபுரத்தில் மீட்பு..!
x
தினத்தந்தி 20 Aug 2023 2:09 AM GMT (Updated: 20 Aug 2023 6:18 AM GMT)

வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை காஞ்சிபுரத்தில் மீட்கப்பட்டுள்ளது.

வேலூர்,

வேலூர் அரசு மருத்துவமனையில் தாய்க்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை காஞ்சிபுரத்தில் மீட்கப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட சிசிடிவிகளை ஆய்வு செய்து 8 மணி நேரத்தில் குழந்தையை போலீசார் மீட்டனர். குழந்தையை கடத்திய பெண்ணையும் வேலூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தையை கடத்தியது ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த பத்மா என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வழக்கின் முழுவிவரம்:-

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்த சுந்தர் என்பவரின் மனைவி சூரியகலா (வயது 37). சற்று காது கேட்காமல் இருப்பதோடு, பேசவும் முடியாதவர் என கூறப்படுகிறது. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 3-வது முறையாக கர்ப்பிணியான சூரியகலா கடந்த 4 தினங்களுக்கு முன்பு பிரசவத்துக்காக கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதன்பின் அவர் குடும்ப கட்டுப்பாடு செய்வதற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று மதியம் சூரியகலா அடையாளம் தெரியாத பெண்ணோடு உணவு சாப்பிட்டதாகவும், சிறிது நேரத்தில் மயக்கமடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் மயக்கம் தெளிந்தபின் எழுந்தபோது குழந்தை காணாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் விசாரித்தும் குழந்தை கிடைக்காததால் போலீசாருக்கு குடும்பத்தினர் தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சூரியகலாவுடன் உணவு சாப்பிட்ட பெண்தான் குழந்தையை திருடியிருக்க வேண்டும் என கருதிய போலீசார் மருத்துவமனை வார்டிலிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மொட்டை தலையுடன் கூடிய பெண் ஒருவர் குழந்தையை தூக்கி செல்லும் காட்சி பதிவாகியது. இதன் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தற்போது குழந்தையை மீட்டுள்ளனர்.


Next Story