கடையில் வேலைபார்த்த 3 சிறுமிகள் மீட்பு


கடையில் வேலைபார்த்த 3 சிறுமிகள் மீட்பு
x

ராமநாதபுரம் அருகே அதிகாரிகள் கடைகளில் நடத்திய அதிரடி சோதனையில் குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றிய 3 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் அருகே அதிகாரிகள் கடைகளில் நடத்திய அதிரடி சோதனையில் குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றிய 3 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

ஆய்வு

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் வகையில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கல்வியை தவிர எந்த வேலையிலும் ஈடுபடுத்தக்கூடாது என்றும் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்றும் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.

இந்த சட்டத்தின்கீழ் அனைத்து பகுதிகளிலும் சம்பந்தப்பட்ட துறையினர் விரிவான ஆய்வு மேற்கொண்டு குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதை தடுத்து வருகின்றனர்.

மீட்பு

இதுதவிர, அனைத்து கடைகளிலும் குழந்தை தொழிலா ளர்கள் யாரும் பணியில் அமர்த்தப்படவில்லை என்று அறிவிப்பு பலகை வைத்து அதுகுறித்து தகவல் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் இந்த சட்டத்தை மீறி அவ்வப்போது குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு வரும் குழந்தைகளை சிலர் பணிக்கு அமர்த்தி வருவது கண்டறியப்பட்டு குழந்தைகள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ராமநாதபுரம் அருகே ஒரு வர்த்தக நிறுவனம் மற்றும் ஒரு ஜவுளி கடையில் 3 சிறுமிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் சார்பு அணியினர், போலீசாருடன் அந்த கடைகளுக்கு சென்று 3 சிறுமிகளை மீட்டனர். 15 முதல் 16 வயதுடைய அந்த சிறுமிகள் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

எச்சரிக்கை

இதன்பின்னர் அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்ப கூடாது கல்வி கற்க மட்டுமே அனுப்ப வேண்டும். அதற்கான வசதிகளை, உதவிகளை அரசு செய்து கொடுப்பதை எடுத்துக்கூறி அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சிறுமிகளை வேலைக்கு அமர்த்திய கடை களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்தநிலையில் ராமநாதபுரம் நகரில் நேற்று முக்கிய சாலை வீதிகளில் ஒரு குடும்பத்தினர் பாட்டு போட்டு அதற்கு ஏற்ப ஆடிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது அவர்களின் 2 வயது பெண் குழந்தையையும் ஆடவிட்டு வேடிக்கை காட்டி பிச்சை எடுத்து கொண்டு இருந்தனர்.

விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு பிரிவினர் அங்கு போலீசாருடன் விரைந்து சென்று விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் அவர்கள் மானாமதுரை பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் திருஉத்திரகோசமங்கை பகுதியில் தங்கி இருந்து கிராமங்கள்தோறும் சென்று ஆடிப்பாடி வருவதாக தெரிவித்தனர். சிறுமியை ஆடவைத்து பிச்சை எடுக்கக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைக்கப் பட்டனர்.


Next Story