குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்


குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
x
தினத்தந்தி 30 April 2023 6:45 PM GMT (Updated: 30 April 2023 6:46 PM GMT)

சீர்காழியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட சமூக பாதுகாப்பு துறை, குழந்தைகள் பாதுகாப்பு மையம் சார்பில் நகராட்சி பகுதியில் குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர் முறையினை ஒழித்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்தல், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி ஆணையர் வாசுதேவன் தலைமை தாங்கினார். நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் முன்னிலை வகித்தார். மேலாளர் காதர் கான் வரவேற்றார். கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டு மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் பெற்றோர்களை இழந்து வாழும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகையாக மாதம் ரூ.4 ஆயிரம் விதம் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் நகராட்சி பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அலுவலர்களை கொண்டு நகராட்சி அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைத்து கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை உதவியாளர் ராஜ கணேஷ் நன்றி கூறினார்.


Next Story