இலங்கை துறைமுகத்தில் சீனாவின் உளவுக்கப்பல் நிறுத்த அனுமதி - அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்


இலங்கை துறைமுகத்தில் சீனாவின் உளவுக்கப்பல் நிறுத்த அனுமதி - அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
x

இலங்கை துறைமுகத்தில் சீனாவின் உளவுக்கப்பல் நிறுத்த அனுமதி அளித்ததை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

சென்னை,

இலங்கை துறைமுகத்தில் சீனாவின் உளவுக்கப்பல் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டதற்கு டாக்டர் ராமதாஸ், வைகோ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். மத்திய அரசு இதனை தடுத்து நிறுத்தக்கோரி வலியுறுத்தியுள்ளனர். அதன் விவரம் வருமாறு,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு, இப்போது அதன் நிலையை மாற்றிக் கொண்டு சீன உளவுக்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர அனுமதித்திருக்கிறது. இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்.

இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு கருதி, இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:- தற்போது இலங்கை வெளியுறவு அமைச்சகம், யுவான் வாங்க்-5 உளவு கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வருகிற 16-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நங்கூரமிட்டு நிறுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. இந்திய அரசு, இலங்கை அரசின் இத்தகைய செயல்களை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. உடனடியாக இந்தியா தீவிர கவனம் செலுத்தி சீன கப்பல் வருகையை தடுத்து நிறுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story