சின்னமனூரில்பட்டாசு வெடித்து அண்ணன்- தம்பி பலி


சின்னமனூரில்பட்டாசு வெடித்து அண்ணன்- தம்பி பலி
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 18 March 2023 6:46 PM GMT)

சின்னமனூரில் பட்டாசு வெடித்து அண்ணன்-தம்பி பலியாகினர்.

தேனி

அண்ணன்-தம்பி

தேனி மாவட்டம் சின்–ன–ம–னூர் அருகே ஹைவே–விஸ் பேரூ–ராட்–சி–யில் உள்ள வெண்–ணி–யார் எஸ்டேட் பகு–தி–யைச் சேர்ந்–த–வர் சஞ்சய் காந்தி. இவரது மகன்கள் அபினேஷ் (வயது 18), அஸ்வின் (17). அபினேஷ் தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். அஸ்வின் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இவர்கள் இருவரும் தினந்தோறும் சின்னமனூருக்கு வந்து வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு செல்வது வழக்கம். அதன்படி கடந்த 7-ந்தேதி இரவு இருவரும் சின்னமனூருக்கு வந்தனர். அவர்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு ஊருக்கு செல்வதற்காக பஸ் நிலையத்திற்கு சென்றனர். ஆனால் வெண்ணியார் எஸ்டேட்டுக்கு செல்லும் கடைசி பஸ் சென்று விட்டது.

பட்டாசு வெடித்து விபத்து

இதனால் 2 பேரும் சின்னமனூர் பஸ் நிலையத்தில் அவர்களது உறவினர் ஜெயபிரகாஷ் என்பவர் வைத்துள்ள வெளியூர்களுக்கு பார்சல் அனுப்பும் கடைக்கு சென்றனர். அங்கு அண்ணன்-தம்பி இருவரும் தங்கினர். அப்போது கொசு கடி அதிகமாக இருந்ததால் கொசுவர்த்தி சுருளை கொளுத்தி வைத்தனர்.

அந்த கொசுவர்த்தி சுருள் இருந்த தீப்பொறி எதிர்பாராத விதமாக அருகே இருந்த பட்டாசு பாக்சில் பட்டது. இதையடுத்து மறுநாள் அதிகாலை 4 மணி அளவில் கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்து தீப்பற்றி இரும்பு ஷட்டர் கதவையும் உடைத்து தீ எரிந்தது. இதில் கடையில் தூங்கிக் கொண்டிருந்த இருவரும் தீயில் சிக்கி படுகாயமடைந்தனர்.

2 பேரும் சாவு

இதையடுத்து சின்னமனூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர் படுகாயமடைந்த அபினேஷ், அஸ்வின் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story