சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா


சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
x
தினத்தந்தி 5 May 2023 6:33 PM GMT (Updated: 5 May 2023 6:35 PM GMT)

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமைபெற்ற மதுரகாளியம்மன் கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 5-ந் தேதி விமரிசையாக நடந்தது. இதைத்தொடர்ந்து தினமும் மண்டல பூஜைகள் நடைெபற்று வருகின்றன. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் சென்னை கோட்டூர் ஸ்ரீமகாமேரு மண்டலி சார்பில் 13-வது சித்ரா பவுர்ணமி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதனை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், பருவமழை தவறாமல் பெய்து தனதானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழவும் வேண்டி முதல்நாள் சண்டி மஞ்சரி மகா ஹோமமும், நேற்று ஸ்ரீநவாவரண ஹோமமும் நடந்தது. விழாவிற்கு ஸ்ரீமதுராம்பிகானந்த பரமேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் தலைமை தாங்கி ஹோமங்கள் மற்றும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனையை தொடங்கி வைத்தார். இதில் ஸ்ரீமகா மேரு மண்டலியின் நிர்வாக பொறுப்பாளர் சுப்ரமணியன் முன்னிலையில் கும்ப பூஜைகளும், ஸ்ரீமதுரகாளி உற்சவ அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தன.

நேற்று காலை குருவுக்கு பாத பூஜையும் நடந்தது. அதனைத்தொடர்ந்து ஸ்ரீநவாவரண பூஜையும், ஸ்ரீநவாவரண ஹோமமும், உச்சிகாலம் வரை அகண்ட ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பாராயணமும், குங்கும அர்ச்சனையும் நடந்தது. இதில் மகாமேரூ மண்டலியின் ஆன்மிக மெய்யன்பர்கள், சென்னை, தஞ்சை, அரியலூர் திருவாரூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த சுமங்கலி பெண்கள் திரளாக கலந்து கொண்டு லலிதா சகஸ்ரநாம பாராயணத்துடன் குங்கும அர்ச்சனை செய்து, அம்பாளை வழிபட்டனர். பின்னர் சித்தர்களுக்கு மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டு, அன்னதானம் நடைபெற்றது.


Next Story