கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை எதிரொலி விமான கட்டணம் பல மடங்கு உயர்வு


கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை எதிரொலி விமான கட்டணம் பல மடங்கு உயர்வு
x

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை காரணமாக விமான டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்து உள்ளது. அதன்படி தூத்துக்குடிக்கு ரூ.14, 500 ஆகவும், மதுரைக்கு ரூ.14 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது.

மீனம்பாக்கம்,

கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு விடுமுறையுடன் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையும் வருகிற 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை விடப்படுகிறது. இந்த தொடர் விடுமுறை காரணமாக சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட வெளியூர் பயணிகள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதிலும், வெளிநாடுகளுக்கும், இந்தியாவில் உள்ள சுற்றுலா நகரங்களுக்கு செல்வதிலும் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

மேலும் சபரிமலை அய்யப்பன் கோவி்லுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளன. இதனால் ெரயில்கள், பஸ்களில் ஏற்கனவே முன்பதிவுகள் முடிந்து விட்டன. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் தற்போது விமான நிலையத்தை நோக்கி கவனத்தை திருப்பி உள்ளனர்.

விமான சேவை அதிகரிப்பு

இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் குறிப்பாக தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, கொச்சி, திருவனந்தபுரம் செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சபரிமலை பக்தர்கள் கூட்டமும் அலை மோதுவதால் கொச்சி, திருவனந்தபுரம் விமானங்களில் வழக்கத்தை விட அதிகமான பயணிகள் கூட்டம் இருக்கிறது.

இதையடுத்து சென்னையில் இருந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. மதுரைக்கு நாள் ஒன்றுக்கு வருகை, புறப்பாடு என 10 முதல் 12 விமானங்கள் இயக்கப்பட்டன. தற்போது 14 விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் தூத்துக்குடிக்கு 6 ஆக இருந்த விமானங்கள் 8 ஆகவும், கோவைக்கு 10-ல் இருந்து 16 ஆகவும், திருச்சிக்கு 6-ல் இருந்து 8 ஆகவும், கொச்சிக்கு 10-ல் இருந்து 12 ஆகவும், திருவனந்தபுரத்துக்கு 4 ஆக இருந்த விமான சேவைகள் தற்போது 6 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அனைத்து விமானங்களும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன.

கட்டணம் உயர்வு

பண்டிகை தொடர் விடுமுறையை தொடர்ந்து விமான பயண டிக்கெட் கட்டணங்களும் பலமடங்கு உயர்ந்து இருப்பது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.5,300 வரை இருந்த விமான கட்டணம் தற்போது ரூ.14,500 வரையும், மதுரைக்கு ரூ.3,600 ஆக இருந்த டிக்கெட் ரூ.14 ஆயிரமாகவும், கோவைக்கு ரூ.3,500 ஆக இருந்த டிக்கெட் தற்போது ரூ.13,500 வரையும், திருச்சிக்கு ரூ.3,500 ஆக இருந்த விமான டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.10 ஆயிரம் வரையும், கொச்சிக்கு ரூ.3,500 என இருந்த கட்டணம் தற்போது ரூ.19,500 வரையிலும், திருவனந்தபுரத்துக்கு ரூ.5,150 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.21 ஆயிரம் வரையிலும் அதிகரித்துள்ளன.

பயணிகள் ஆர்வம்

டிக்கெட் விலை ராக்கெட் போல் உயர்ந்தாலும், சொந்த ஊர்களில் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில் பயணிகள் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு விமானத்திலும் குறைந்த கட்டண டிக்கெட் குறிப்பிட்ட இருக்கையுடன் வெளியாகும். அந்த டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததும் அதிக கட்டண டிக்கெட்டுகள் கொண்ட இருக்கைகள் தான் இருக்கும். இது வழக்கமானதுதான். எனவே விடுமுறை காலங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூற முடியாது என விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story