பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

வாணியம்பாடி அருகே பல ஆண்டுகளாக குடியிருக்கும் இடத்திற்கு மின் இணைப்பு பெற முடியாததால் வக்பு வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

பள்ளி வாசல் இடம்

வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் ஜாப்ராபாத் பகுதியில் 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அவர்கள் வசித்து வரும் சுமார் 5 ஏக்கருக்கு மேல் உள்ள இடம் வக்பு வாரிய கட்டுப்பாட்டில் உள்ள பழைய பள்ளிவாசலுக்கு சொந்தமானது என அதிகாரிகள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகம் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை பொதுமக்கள் விற்பனை செய்ய முடியாமலும், புதிதாக வீடு கட்டினால் அதற்கு மின் இணைப்பு வாங்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வாணியம்பாடியில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா போலீசார் மற்றும் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பான சூழல் காணப்பட்டது.


Next Story