சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2023 6:45 PM GMT (Updated: 7 Feb 2023 6:46 PM GMT)

ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட வலியுறுத்தி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. ெதாழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

ஊட்டி,

ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட வலியுறுத்தி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. ெதாழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட வேண்டும், ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்படி நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வினோத் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை பொருளாளர் நவீன்சந்திரன் தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் நகராட்சி டாஸ்மாக் சுமை நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

பணி நிரந்தரம்

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

மத்திய, மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்களில் நிரந்தர பணி நியமனத்தை நிறுத்திவிட்டு, ஒப்பந்த முறையில் ஊழியர்களை பணியமர்த்தும் திட்டத்தோடு தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் நிரந்தர பணி என்பது கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

மேலும் டாஸ்மாக், நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை, அரசு போக்குவரத்து, மின்சார வாரியம், அங்கன்வாடி, கூட்டுறவு நுகர்வோர் வாணிப கழகம் உள்ளிட்ட அனைத்து அரசு துறை நிறுவனங்களிலும் உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். நல வாரியத்தில் நிறுத்தப்பட்டு உள்ள ஓய்வூதிய திட்டத்தை நிபந்தனையின்றி உடனே வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஆதிரா மற்றும் நிர்வாகிகள், தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story