ஏகாட்டூர் ரெயில் நிலையத்தில் மோதல்: சென்னை கல்லூரி மாணவர்கள் மேலும் 2 பேர் கைது


ஏகாட்டூர் ரெயில் நிலையத்தில் மோதல்: சென்னை கல்லூரி மாணவர்கள் மேலும் 2 பேர் கைது
x

ஏகாட்டூர் ரெயில் நிலையத்தில் மோதலில் ஈடுப்பட்ட சென்னை கல்லூரி மாணவர்கள் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் ரெயில் நிலையத்தில் கடந்த 16-ந்தேதி பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஜல்லி கற்கள் மற்றும் கத்தியால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படிக்கும் தக்கோலம் ராஜம்பேட்டை கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 20) என்பவரை கத்தியால் தலையில் வெட்டிவிட்டு மற்றொரு கல்லூரி மாணவர்கள் தப்பி ஓடினார்கள். இதில் காயமடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் திருவள்ளூர் ரெயில்வே போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை கல்லூரி மாணவர்களான திருவள்ளூர் அடுத்த நெய்வேலியை சேர்ந்த மெர்லின் (19) மற்றும் சூர்யா (19) ஆகிய மேலும் 2 பேரை கைது செய்து திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story