குட்டையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி


குட்டையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி
x

தாரமங்கலம் அருகே குட்டையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலியானார்.

சேலம்

தாரமங்கலம் அருகே குட்டையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பலியானார்.

பள்ளி மாணவர்

சேலம் அருகே உள்ள மஜ்ரா கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் நேற்று அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான தமிழ்செல்வன் என்பவருடன் தாரமங்கலம் அருகே அணைமேடு பகுதியில் உள்ள குட்டைக்கு குளிக்க சென்றார்.

அங்கு இருவரும் குட்டையில் இறங்கி குளித்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற கோபாலகிருஷ்ணன் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தமிழ்செல்வன் காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர்.

உடலை மீட்டனர்

பின்னர் இதுகுறித்து சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் தண்டாயுதம் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் குட்டையில் மூழ்கி இறந்த மாணவன் கோபாலகிருஷ்ணனின் உடலை மீட்டனர்.

மாணவனின் உடலை தாரமங்கலம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story