மதுரை விமான நிலையத்தில் தூய்மைப்பணி


மதுரை விமான நிலையத்தில் தூய்மைப்பணி
x

மதுரை விமான நிலையத்தில் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.

மதுரை


குப்பை இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, திறந்தவெளி கழிவறையை ஒழித்தல், நகரங்களை தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பணிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஸ்வச் பாரத் எனும் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அந்த திட்டத்தின் கீழ், மதுரை விமான நிலையத்திலும் தூய்மைப்பணிகள் நடக்கிறது. கடந்த 2-ந்தேதி, மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் தொடங்கப்பட்ட இந்த தூய்மைப்பணியானது, வருகிற 31-ந்தேதி வரை நடக்கிறது. அதன்படி மதுரை விமான நிலையத்தின் உள்வளாகம் மற்றும் வெளிவளாகத்தில் குப்பைகள் அகற்றும் பணி, தூய்மையாக்கும் பணிகள் நடந்தது. அலுவலக பழைய ஆவண குப்பைகளை அகற்றுதல், குடிநீர் தொட்டிகளை சுத்தப்படுத்துதல் மற்றும் பராமரிப்பு செய்தல், விமான நிலைய உணவகத்தை மேம்படுத்தும் பணிகள், பார்க்கிங் பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.

முன்னதாக, விமான நிலைய பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்வது தொடர்பாக விமான நிலைய இயக்குனர் பாபுராஜ் தலைமையில் விமான நிலைய ஊழியர்கள், மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரர்கள், ஒப்பந்த பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் உமாமகேஷ்வரன், விமான நிலைய துணை பொது மேலாளர் ஜானகிராமன், மனிதவள மேலாளர் லோகநாதன், தெர்மினல் மேலாளர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். வரும் நாட்களிலும் இந்த தூய்மை பணிகள் நடக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story