அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா


அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா
x

நாமக்கல் மாவட்டத்தில் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா நடந்தது.

நாமக்கல்

நாமக்கல் அண்ணா சிலை அருகே பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், தி.மு.க‌. மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்‌.ராஜேஸ்குமார் எம்.பி‌., பெ.ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேராசிரியர் அன்பழகனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தி‌.மு.க. மாவட்ட அவைத் தலைவர் மணிமாறன், தீர்மானக்குழு துணைத் தலைவர் பார் இளங்கோவன், நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி, கொறடா சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேராசிரியர் அன்பழகனின் உருவப்படத்தை அமைச்சர் மதிவேந்தன், கே.ஆர்.என்‌.ராஜேஸ்குமார் எம்.பி. ஆகியோர் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி, தலைமை ஆசிரியர் பெரியண்ணன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

நாமகிரிப்பேட்டை

நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் பேரூராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி அவரது பட திறப்பு விழா நடந்தது.

சிறப்பு விருந்தினராக தி.மு.க. கொள்கை பரப்பு துணைச்செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான பி.ஆர்.சுந்தரம் கலந்து கொண்டு பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நாமகிரிப்பேட்டை பேரூர் செயலாளர் அன்பழகன், பேரூராட்சி தலைவர் சேரன், சீராப்பள்ளி திமுக செயலாளர் செல்வராஜ், இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், அட்மா குழு தலைவர் ரவி, வார்டு செயலாளர்கள், ஊராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எருமப்பட்டி

எருமப்பட்டி கைகாட்டியில் தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அட்மா குழு தலைவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். எருமப்பட்டி ஒன்றிய முன்னாள் தி.மு.க. செயலாளர் பரமசிவம் வரவேற்றார். எருமப்பட்டி பேரூராட்சி தலைவர் பழனியாண்டி முன்னிலை வகித்தார். முன்னதாக தி.மு.க. கொடியேற்றப்பட்டது. இதையடுத்து மாநில செயற்குழு உறுப்பினர் பவித்திரம் கண்ணன் கலந்து கொண்டு பேசினார். இதில் முன்னாள் பேரூராட்சி செயலாளர் சுந்தர்ராஜன், முன்னாள் பேரூராட்சி தலைவர் நிர்மலா, எருமப்பட்டி பேரூராட்சி அவைத்தலைவர் காந்தி, ஹபி என்கிற ஹபியுல்லா, நாமக்கல் பிரதிநிதிகள் பாலகிருஷ்ணன், கவி சதீஷ், வினோத்குமார், சேகர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி துணைத்தலைவர் ரவி நன்றி கூறினார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.


Next Story