மர்மசாவு வழக்கில் துப்பு துலங்கியது: சிறுமியை கொன்ற தாய் கைது


மர்மசாவு வழக்கில் துப்பு துலங்கியது: சிறுமியை கொன்ற தாய் கைது
x
தினத்தந்தி 8 July 2023 6:45 PM GMT (Updated: 9 July 2023 11:47 AM GMT)

சங்கரன்கோவிலில் 5 வயது சிறுமியை அடித்துக் கொன்றதாக அவளது தாய் கைது செய்யப்பட்டார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் 5 வயது சிறுமியை அடித்துக் கொன்றதாக அவளது தாய் கைது செய்யப்பட்டார்.

சிறுமி மதுஷிகா

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் கீழ 1-ம் ெதருவை சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மனைவி இசக்கியம்மாள் (வயது 26). இவர்களுக்கு 5 வயதில் மதுஷிகா என்ற மகள் இருந்தாள்.

மாடசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் உயிரிழந்து விட்டார். இதையடுத்து இசக்கியம்மாள் தனது மகளுடன் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்புத்தூரில் வசித்து வந்தார். அவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த மாதம் (ஜூன்) 9-ந்தேதி இரவு சிறுமி மதுஷிகா உடல் நலக்குறைவால் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அப்போது அரசு ஆஸ்பத்திரியில் திரண்ட மதுஷிகாவின் தந்தை மாடசாமியின் உறவினர்கள், சிறுமியின் சாவில் மர்மம் உள்ளது. குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

திடுக்கிடும் தகவல்

இதுதொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார், மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மதுஷிகாவின் தாயார் இசக்கியம்மாள் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், மகளை அவரே கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியானது. அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

அடிப்பேன்

எனது மகள் மதுஷிகா பிறந்த ஒரு மாதத்தில் எனது கணவர் மாடசாமி விபத்தில் உயிரிழந்தார். இதனால் ஆரம்பத்தில் இருந்தே மதுஷிகா மீது பாசம் காட்டாமல் வளர்த்து வந்தேன். மேலும் அவளது உடல் நிலையிலும் அக்கறை செலுத்தாமல் இருந்தேன். அவ்வப்போது அடிப்பேன்.

அவள் இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு அடித்தேன். இதனால் அவளுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. ஆனால் நான் காலையில் வேலைக்கு சென்று விட்டேன். பின்னர் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோதும், அவளுக்கு காய்ச்சல் அடித்ததால் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். அங்கு அவள் இறந்து விட்டாள்.

இவ்வாறு இசக்கியம்மாள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

தாயார் கைது

இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி இசக்கியம்மாளை கைது செய்தனர்.

சிறுமி மர்ம சாவு வழக்கில் துப்பு துலங்கி, அவளை அடித்துக் கொன்றதாக தாயே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story