கடலோர பாதுகாப்பு ஒத்திகை


கடலோர பாதுகாப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 10 Oct 2023 5:59 PM GMT (Updated: 10 Oct 2023 6:15 PM GMT)

கோட்டைப்பட்டினம், மணமேல்குடியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

புதுக்கோட்டை

கடலோர பாதுகாப்பு ஒத்திகை

கடலோர பகுதியில் தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் விதமாக 6 மாதங்களுக்கு ஒரு முறை சாகர் கவாச் என்ற ஒத்திகை நடைபெறும். அதன்படி புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கடலோர பகுதியில் 2 நாட்கள் ஒத்திகை நடைபெறுகிறது. இந்த ஒத்திகையில் கடல் வழியே தீவிரவாதிகள் ஊடுருவி வந்தால் அவர்களை எவ்வாறு தடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

இதையடுத்து நேற்று புதுக்கோட்டை மாவட்டம், கடலோர பகுதிகளான கட்டுமாவடி, மும்பாலை, ஆதிப்பட்டினம், கோட்டைப்பட்டினம், பாலக்குடி, ஏம்பக்கோட்டை, அரசங்கரை ஆகிய 7 இடங்களில் சோதனை சாவடி அமைத்து அவ்வழியே வரும் வாகனங்களை சோதனை செய்தனர். மேலும் அவர்கள் வாகனத்தின் பதிவு எண்களை பதிவு செய்த பின்னரே வாகனம் செல்ல அனுமதித்தனர்.

படகுகள் சோதனை

கடலோர காவல் குழுமத்தினர் தங்கள் ரோந்து படகின் மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வரும் படகுகளை சோதனை செய்தனர். பின்னர் படகிற்கு பதிவு எண் உள்ளதா மற்றும் மீனவர்களுக்கு அடையாள அட்டை உள்ளதா என்று சரிபார்த்த பின்னரே படகுகள் செல்ல அனுமதிக்கின்றனர். மேலும் அவர்களிடம் சந்தேகம்படும் படி யாரேனும் தென்பட்டால் உடனே தகவல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதில் காவல்துறையினர், கடலோர காவல் குழுமத்தினர், கடலோர காவல் படையினர், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர். கடலோர பாதுகாப்பு ஒத்திகை நாளையும் (புதன்கிழமை) நடக்கிறது.

மணமேல்குடி

மணமேல்குடியில் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமையில், போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் இணைந்து கண்டனிவயல் சோதனை சாவடியில் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர். மேலும் மணமேல்குடி கோடியக்கரை பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.

இதேபோல் மீனவ கிராமங்களான புதுக்குடி, பொன்னகரம் அந்தோணியார்புரம், வடக்கம்மாபட்டினம், மேலஸ்தானம் ஆகிய பகுதிகளுக்கு சென்ற போலீசார் மக்களிடம் கடத்தல் தடுப்பு சம்பந்தமாகவும், தீவிரவாத தடுப்பு சம்பந்தமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story