5 மாதங்களாக கொப்பரை விலை உயராமல் உள்ளது


5 மாதங்களாக கொப்பரை விலை உயராமல் உள்ளது
x

தேங்காய் வரத்து அதிகரித்த காரணத்தினால் காங்கயம் மார்க்கெட்டில் கடந்த 5 மாதங்களாக கொப்பரை விலை உயராமல் உள்ளது. அடுத்த 2 மாதங்களில் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

திருப்பூர்

காங்கயம்

தேங்காய் வரத்து அதிகரித்த காரணத்தினால் காங்கயம் மார்க்கெட்டில் கடந்த 5 மாதங்களாக கொப்பரை விலை உயராமல் உள்ளது. அடுத்த 2 மாதங்களில் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தேங்காய் உலர்த்தும் களங்கள்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதிகளில் சுமார் 600-க்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர் களங்கள் உள்ளன. இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம்,கொல்கத்தா, கோல்கட்டா, ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்களும், தமிழகத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் வேலை செய்து வருகின்றனர்.

இந்த களங்களுக்கு அந்தந்த பகுதிகளில் இருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கர்நாடக, கேரளாவிலிருந்தும் தேங்காய் கொண்டுவரப்பட்டு மட்டை உரித்து, உடைத்து உலர வைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. உலர்களங்களில் உலர்த்தப்படும் பருப்பு தனியார் தேங்காய் எண்ணெய் நிறுவனங்களுக்கும், காங்கயம் பகுதியில் உள்ள கிரஷிங் யூனிட்டுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இது தவிர ராஜஸ்தான், கேரளா, மும்பை, கொல்கத்தா, புதுடெல்லி உள்ளிட்ட பிறவட மாநில பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

10 ஆயிரம் தொழிலாளர்கள்

காங்கயம் கிரஷிங் யூனிட்டுகளில் எண்ணெயாக மாற்றப்படும் எண்ணெய், டேங்கர் லாரிகள், டின்களில் அடைக்கப்பட்டு வட மாநில பகுதிகளான குஜராத், டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.மேலும் டின்கள், பாட்டில்கள், பவுச்சுகளில் அடைக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் கடைகள் மூலம் விற்பனைக்கும் அனுப்பப்படுகிறது. தேங்காய் உலர்களம் மற்றும் அதனைச்சார்ந்த தொழில்களில் புதுக்கோட்டை, திண்டுக்கல், தஞ்சை, மதுரை மற்றும் வட மாநிலங்களைச் சார்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் காங்கயம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கடந்த நவம்பர் மாதம் ரூ.101 ஆக இருந்த தேங்காய் பருப்பு விலை பின்னர் படிப்படியாக குறைந்து, நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 1 கிலோ தேங்காய் பருப்பு ரூ.84 ஆக இருந்தது. பின்னர் தொடர்ந்து கடந்த 5 மாதங்களாக தேங்காய் பருப்பின் விலையில் ஏற்றமில்லாமல் இருந்து வருகிறது. நேற்று ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூ.83 ஆகவும், 15 கிலோ கொண்ட எண்ணெய் டின் ரூ.900 ஆகவும் இருந்தது. இதனால் தோப்புகளில் தேங்காய்களின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

விலை அதிகரிக்க வாய்ப்பு

இதுபற்றி தேங்காய் கள வட்டாரங்களில் உள்ளவர்கள் கூறியதாவது:-

தற்போது தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து தேங்காய் வரத்து அதிகரித்ததன் காரணமாக தேங்காய் பருப்பின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் தற்போது ராஜஸ்தான், கேரளா, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய பகுதிகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை குறைவாக உள்ளதாலும், தற்போது பருப்பின் விலை குறைந்துள்ளது.

அடுத்த 2 மாதங்களில் வட மாநிலங்களில் பண்டிகைகள் வரவுள்ளதால் தேங்காய் எண்ணெயின் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் வரும் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தேங்காய் பருப்பின் விலை படிப்படியாக உயர வாய்ப்புள்ளது என்றனர்.


Related Tags :
Next Story