தென்னந்தோப்புகளில் குவிந்து கிடக்கும் தேங்காய்கள்

நெகமம் பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சி காரணமாக, தென்னந்தோப்புகளில் உரிக்காமல் தேங்காய்கள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
நெகமம்,
நெகமம் பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சி காரணமாக, தென்னந்தோப்புகளில் உரிக்காமல் தேங்காய்கள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
விலை வீழ்ச்சி
நெகமம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. தென்னையில் இருந்து தேங்காய், கொப்பரை மற்றும் பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தேங்காய் ரூ.13, ஒரு கிலோ ரூ.26 வரையும் விற்பனையானது. ஓரளவு விலை கிடைத்து வந்தது. மேலும் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் சிரமம் அடைந்தனர்.
இந்தநிலையில் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. தற்போது ஒரு தேங்காய் ரூ.10-க்கும், ஒரு கிலோ ரூ.24 முதல் 24 ரூபாய் 50 காசு வரை விற்பனை ஆகிறது. இதனால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதன் காரணமாக நெகமம், கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, வடசித்தூர், காட்டம்பட்டி, எம்மேகவுண்டன்பாளையம், ஆண்டிபாளையம், செட்டியக்காபாளையம், சின்னேரிபாளையம், சின்னநெகமம், தேவணாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தென்னந்தோப்புகளில் தேங்காய்களை உரிக்காமல் அப்படியே போட்டு உள்ளனர்.
தேங்காய் எண்ணெய்
ஒவ்வொரு தென்னந்தோப்புகளிலும் 30 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை தேங்காய்கள் உரிக்காமல் மலை போல் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக வெளிமார்க்கெட்டில் தேங்காய் விலை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தென்னை விவசாயி ஒருவர் கூறும்போது, பொள்ளாச்சி தாலுகா பகுதியில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக தென்னை சாகுபடி பாதிப்படைந்து வருகிறது. இதற்கிடையே தற்போது தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. விலை உயரும் என்ற நம்பிக்கையில் தேங்காய்களை உரிக்காமல் தோப்புகளில் அப்படியே வைத்து உள்ளோம். தேங்காய் விலை வீழ்ச்சிக்கு காரணம் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக பாமாயில் பயன்படுத்துவதே ஆகும். எனவே, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தால் தான் தேங்காய் விலை உயர வாய்ப்பு உள்ளது என்றார்.






