அரசு கல்லூரி அமைக்க மாணவ-மாணவிகள் கோரிக்கை


அரசு கல்லூரி அமைக்க மாணவ-மாணவிகள் கோரிக்கை
x

எஸ்.புதூர் ஒன்றிய பகுதியில் அரசு கல்லூரி அமைக்க மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் ஒன்றிய பகுதியில் அரசு கல்லூரி அமைக்க மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கானல் நீர்

சிவகங்கை மாவட்டத்தில் பின்தங்கிய ஒன்றிய பகுதியும், மலை சார்ந்த பகுதியுமான இந்த ஒன்றியத்தில் 5-க்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. ஆண்டுதோறும் இந்தபள்ளிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறுகின்றனர். இதுதவிர வெளியூர் தனியார் பள்ளிகளில் இருந்தும், மேலும் பலர் 12-ம் வகுப்பு முடித்து வெளியேறுகின்றனர்.

ஆனால் இந்த மாணவர்களில் வெகு சிலர் மட்டுமே மேற்படிப்புக்காக கல்லூரி செல்கின்றனர். பலரது கல்லூரி கனவுகள் கானல் நீராகவே மாறிவிடுகிறது. இந்த ஒன்றியத்தில் எந்த ஒரு கலை அறிவியல் கல்லூரியோ, தொழில் நுட்ப கல்லூரியோ இல்லாததே இதற்கு காரணம்.

போக்குவரத்து வசதி

இப்பகுதி மாணவர்கள் மேற்படிப்புக்காக கல்லூரி செல்ல வேண்டும் என்றால் 30 முதல் 50 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வர வேண்டி உள்ளது. அதே நேரம் அந்த ஊர்களுக்கு இந்த ஒன்றியத்தில் இருந்து குறித்த நேரங்களுக்கு பஸ் வசதி கிடையாது. கல்லூரிக்கு செல்ல சிங்கம்புணரி, பொன்னமராவதி அல்லது பிற மாவட்டங்களுக்கு சென்று 2 முதல் 3 பஸ்கள் மாறி, மாறி பயணிக்க வேண்டி உள்ளது. இதனால் கல்லூரிகளுக்கு காலை 6 மணிக்கு சென்று இரவு 8 மணிக்கு மேல் தான் வீடு திரும்பும் நிலை உள்ளது. இந்த காரணத்தாலேயே பல மாணவர்கள் மேற்படிப்புக்கு செல்வது இல்லை.

குறிப்பாக மாணவிகள் பெரும்பாலானோர் கல்லூரி கல்வியை நினைத்து பார்க்கவே முடிவதில்லை. இந்தபகுதியில் 12-ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் பள்ளிப்படிப்பு முடித்த கையோடு கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் வேலைக்கு சென்று விடுகின்றனர். ஒரு சிலர் உள்ளூரிலேயே விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தீயணைப்பு மீட்பு பணி வாகனம்

மேலும் இந்த மலைப்பகுதிகளில் கிராமம் அதிக அளவில் உள்ளது. இங்கு இயற்கை இடர்பாடுகள், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் மீட்பு பணிக்காக சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து மீட்புபணி வாகனம் வரவேண்டி உள்ளது. இதனால் பாதிப்புகள் அதிகஅளவில் ஏற்பட்டு விடுகின்றது. பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மீட்க எஸ்.புதூர் ஒன்றியத்திற்கு தனி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வாகனம் வேண்டும் என பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்- அமைச்சர் இந்த பகுதியில், அரசு கல்லூரி அமைக்கவும், முறையான போக்குவரத்து வசதி, தனி தீயணைப்பு மீட்பு பணி வாகனம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகள், பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது.


Next Story