தர்மபுரி மாவட்டத்தில்1,013 பள்ளிகளில் முதல்-அமைச்சரின்காலை உணவு திட்டம்கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்


தர்மபுரி மாவட்டத்தில்1,013 பள்ளிகளில் முதல்-அமைச்சரின்காலை உணவு திட்டம்கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Aug 2023 7:00 PM GMT (Updated: 25 Aug 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் 1,013 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

காலை உணவு திட்டம்

முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்யும் பணியை திருக்குவளையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் 1,013 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

தர்மபுரி டவுன் நகராட்சி தொடக்கப்பள்ளியில் இந்த திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு உணவு வழங்கினார். டாக்டர் செந்தில்குமார் எம்.பி., வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:- மாவட்டத்தில் பாலக்கோடு வட்டாரத்தில் கடந்த 15.09.2022 அன்று முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் முதற்கட்டமாக தொடங்கப்பட்டது. பாலக்கோடு வட்டாரத்தில் 111 பள்ளிகளில் பயின்றுவரும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள 6126 மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டாரத்தில் சிறப்பு உணவாக ராகிபுட்டு செவ்வாய்க்கிழமை வழங்கப்படுகிறது.

சுய உதவிக்குழுக்கள்

தற்போது மாவட்டத்தில் 2-ம்கட்டமாக அனைத்து வட்டாரங்கள், பேருராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள 1,013 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் ஊராட்சிகளில் 951 பள்ளிகளில் 46,741 மாணவ, மாணவிகளும், பேரூராட்சிகளில் 49 பள்ளிகளில் 3,812 மாணவ, மாணவிகளும், நகராட்சியில் 13 பள்ளிகளில் 974 மாணவ, மாணவிகளும் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் 2833 சுயஉதவிகுழு உறுப்பினர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு காலை உணவு திட்டத்தில் சமையலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தீபனா விஷ்வேஸ்வரி, உதவி கலெக்டர் கீதா ராணி, முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், நகராட்சி ஆணையாளர் புவனேஷ்வரன், மாவட்ட கல்வி அலுவலர் மான்விழி, நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி கவுன்சிலர் நாகராஜன், தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் தங்கமணி, எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story