2023-24-ம் ஆண்டில்ரூ.11,273 கோடி கடன் வழங்க இலக்குதிட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட்டார்


2023-24-ம் ஆண்டில்ரூ.11,273 கோடி கடன் வழங்க இலக்குதிட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டில் ரூ.11,273 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேற்று வெளியிட்டார்.

திட்ட அறிக்கை வெளியீடு

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் 2023-2024-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு வங்கி) நாமக்கல் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ.11 ஆயிரத்து 273 கோடியே 68 லட்சம் அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது. இது 2022-23 ஆண்டை விட 44.16 சதவீதம் அதிகம் ஆகும்.

விவசாயத்தில் நீண்ட கால கடன் அளிப்பதற்கான சாத்தியக் கூறுகளை இத்திட்டம் விளக்குகிறது. அதனடிப்படையில், நாமக்கல் மாவட்டத்திற்கு 2023-24-ம் ஆண்டுக்கு பயிர் கடன் ரூ.4,961.95 கோடி, விவசாய முதலீட்டு கடன் ரூ.1,238 கோடி, விவசாய கட்டமைப்பு கடன் ரூ.115.34 கோடி, விவசாய இதர கடன்கள் ரூ.136.90 கோடி என விவசாயத்திற்கான மொத்த கடன் மதிப்பீடு ரூ.6 ஆயிரத்து 452 கோடி ஆகும்.

சிறு, குறு நடுத்தர தொழில் கடன் ரூ.3,657.75 கோடி, ஏற்றுமதி, கல்வி மற்றும் வீட்டு வசதிக்கான கடன் ரூ.294.79 கோடி, அடிப்படை கட்டுமான வசதி ரூ.66 கோடி, சுய உதவிக்குழு மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்கான கடன் அளவு ரூ.757.80 கோடி என மொத்தம் ரூ.11 ஆயிரத்து 273 கோடியே 68 லட்சம் அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்து கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

உறுதுணையாக இருக்க வேண்டும்

இது போன்ற கடன் வசதிகள், விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி, விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும். வேளாண்மையில் எந்திரமயமாக்கல், சொட்டு மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும். வங்கிகள் இதுபோன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் நபார்டு வங்கி மேலாளர் ரமேஷ், முன்னோடி வங்கி மேலாளர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story