மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி:நன்செய் இடையாற்றில் நோய் தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு


தினத்தந்தி 9 Jan 2023 6:45 PM GMT (Updated: 9 Jan 2023 6:46 PM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரது 3½ வயது மகள் சிவதர்ஷினி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனையடுத்து நாமக்கல் மருத்துவத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நோய் தடுப்பு பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டரிடம் விவசாயிகள் நன்செய் இடையாறு மற்றும் பாலப்பட்டி பகுதிகளுக்கு உரிய நேரத்தில் கால்நடை டாக்டர்கள் வருவதில்லை என்றும், இதனால் சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் கால்நடைகளை அழைத்து செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளதாக கூறினர். இதை கேட்ட கலெக்டர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆய்வின்போது சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரபாகரன், உதவி இயக்குனர்கள் (ஊராட்சிகள்) கலையரசு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வி, பாலப்பட்டி ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் பரமேஸ்வரி, வட்டார மேற்பார்வையாளர் செல்வராஜ், மருத்துவ பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story