வீண் செலவை குறைக்க நானோ யூரியாவை பயன்படுத்துங்கள் விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்


வீண் செலவை குறைக்க நானோ யூரியாவை பயன்படுத்துங்கள் விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்
x

வீண் செலவை குறைக்க நானோ யூரியாவை பயன்படுத்துங்கள் என விவசாயிகளுக்கு கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகள் பயன்பெற அரசு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட நானோ யூரியா என்பது இலை வழியாக தெளித்திட உகந்த தழைச்சத்து உரமாகும். இதில் சாதாரண யூரியா குருணையை விட பல மடங்கு சத்து அதிகம் உள்ளது. அதை பலப்பல துகள்களாக சிறிது சிறிதாக நானோ துகள்களாக பிரிக்கும் போது அதிக தழைச்சத்தை அளித்திட வாய்ப்புள்ளது.

இதனை இலை வழியாக தெளிக்கும் போது உடனடியாக பயிரின் பல பாகங்களுக்கும் எடுத்து செல்லப்படுவதால் விரைவில் பச்சை கட்டும் நன்மையும் நமக்கு கிடைக்கிறது. தன் தேவையை விட கூடுதலாக தழைச்சத்து உட்கிரகிக்கப்பட்டால் அதனை செல்லின் உட்புறம் உள்ள வேக்யோல் எனும் சில பகுதியில் சேமிக்கப்பட்டு தேவைப்படும் தருணம் எடுத்து பயன்படுத்த முடிகிறது.

இதனால் உர விரயம் என்ற பேச்சே இல்லை. முதல் மேலுரம் மற்றும் இரண்டாம் மேலுரம் யூரியாவுக்கு பதிலாக நானோ யூரியா 500 மில்லி லிட்டர் தெளித்தாலே 45 கிலோ யூரியாவின் பலனை அடையலாம்.

உரச்செலவில் சிக்கனம் மட்டுமல்ல நானோ யூரியாவின் சிறப்புகளில் சுற்றுப்புற சூழல்கேடு நேர்வதில்லை.

அதிக களைகள் வளரவும் வழியில்லை. எந்தவித பக்க விளைவுகளும் இல்லை, மண் நீர்ப்பகுதிகளில் நஞ்சு கலக்க வழியே இல்லை.

எனவே, சுற்றுப்புறச்சூழல் காக்கப்படுவது மட்டுமல்லாமல், பிற உயிரினப் பெருக்கம் மூலமாக உணவுச்சங்கிலி உடைபடுவதில்லை. உர உபயோகத்திறன் மேம்பாடு குறையில்லா பயிர் வளரும் சூழல் நன்மை செய்யும் உயிரினத்துக்கு சேதமில்லாத சூழல் நிலவுவதால் நானோ யூரியா நன்மைகள் பல தரும் உரமாக உள்ளது.

எனவே, அனைவரும் இதனை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story