3 லட்சம் மாடுகளுக்கு 3-வது கட்ட கோமாரி நோய் தடுப்பூசி கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்


3 லட்சம் மாடுகளுக்கு 3-வது கட்ட கோமாரி நோய் தடுப்பூசி கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 March 2023 6:45 PM GMT (Updated: 1 March 2023 6:46 PM GMT)

கடலூர் மாவட்டத்தில், 3 லட்சம் மாடுகளுக்கு 3-வது கட்ட தடுப்பூசி முகாமை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

கடலூர்

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டுக்கான 3-வது கட்ட கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது. இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 3 லட்சம் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 90 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடக்கிறது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

இந்த தடுப்பூசி முகாம் தொடக்க நிகழ்ச்சி கடலூர் பாதிரிக்குப்பம் ஊராட்சியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜல்லி சரவணன் தலைமை தாங்கினார். கால்நடை உதவி இயக்குனர் ராஜேஷ்குமார் வரவேற்றார். முகாமை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். மண்டல இணை இயக்குனர் குபேந்திரன் திட்ட விளக்க உரையாற்றினார்.

அப்போது, இந்த கோமாரி நோய் தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சி, ஒன்றியம், நகராட்சி பகுதிகளில் நடக்கிறது. ஆகவே மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு வருகிற 21-ந் தேதி வரை நடக்கும் 3-வது கட்ட தடுப்பூசி முகாமிற்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். முகாமில் கால்நடை உதவி டாக்டர் சுந்தரம், சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story