தொழிற்தட திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு


தொழிற்தட திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு
x
தினத்தந்தி 21 Jun 2023 6:51 PM GMT (Updated: 22 Jun 2023 6:52 AM GMT)

சென்னை - கன்னியாகுமரிதொழிற்தட திட்ட பணிகளை கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

இந்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையால் திட்டமிடப்பட்ட சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ் அரக்கோணம் நகருக்கு 16.92 கி.மீ. புறவழிச்சாலையில் அரிகிலபாடி மற்றும் மேல்பாக்கத்தில் ரெயில்வே கிராசிங் தவிர்க்க சாலை மேம்பாலங்கள், மேலாந்துரை ஏரி மற்றும் கல்லாறு ஆற்றின் குறுக்கே இரண்டு உயர்மட்ட பாலங்கள், 18 சிறு பாலங்கள், 124 குறு பாலங்கள், நகர்புறங்களில் பாதசாரிகளுக்கான பாதுகாப்பு தடுப்பு அடைப்புகளுடன் பாதசாரி நடைபாதைகளுடன் கூடிய ஆர்.சி.சி. வடிகால், 25 இடங்களில் பேருந்து நிறுத்த தடங்கள், 27 இடங்களில் கூடுதல் பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள், திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்பாக்கம் ஊராட்சி கும்மினிபேட்டை கிராமத்தில் உள்ள இருளர் காலனியில் உள்ள வீடுகள் சாலை பணிக்காக அகற்றப்படுவதால் அவர்களுக்கான 41 புதிய வீடுகள், சமுதாயக் கூடம், அங்கன்வாடி மையம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கோவில், சாலைவசதி உள்ளிட்ட கட்டுமானங்கள் நெடுஞ்சாலை துறையின் மூலம் ரூ.5.23 கோடி மதிப்பில் நடைபெறும் பணிகளை மாவட்ட கலெக்டர் வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கமலா, வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) அகிலா, நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் முகுந்தன், உதவி பொறியாளர் சக்திவேல், நீர் வள ஆதாரங்கள் உதவி பொறியாளர் சந்திரன், சென்னை - கன்னியாகுமரி நெடுஞ்சாலை நில எடுப்பு தாசில்தார்பாக்கியநாதன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story