திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


திட்ட பணிகளை கலெக்டர்  ஆய்வு
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:47 PM GMT)

திருப்பத்தூர், நெற்குப்பை மற்றும் சிங்கம்புணரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர், நெற்குப்பை மற்றும் சிங்கம்புணரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

திருப்பத்தூர், சிங்கம்புணரி, நெற்குப்பை ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலில் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையை எதிர் நோக்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்ட தடுப்பு உபகரண பொருட்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் ஓய்வு அறை குறித்து ஆய்வு மேற்கொண்டு திருப்பத்தூர்-காரைக்குடி சாலையில் உள்ள வார்டு 10-ல் கை வண்டி மூலம் முதல்நிலை சேகரிக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வாங்கப்படுவதை ஆய்வு செய்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார்.

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2021-22-ம் ஆண்டின் கீழ் ரூ.1 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் மற்றும் தென்மாபட்டு பகுதியில் தூய்மை பாரத திட்டம் 2021-22-ம் ஆண்டின் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய கழிப்பிடம், புதுப்பட்டி 2-வது வார்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மருதாண்டி ஊருணியில் ரூ.53.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய நடை பாதை, தடுப்புச்சுவர் அமைக்கும் பணி, நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் அச்சுக்கட்டு அய்யனார்கோவில் வீதி மற்றும் மருத்துவர் நகரில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

ஊருணி மேம்பாட்டு பணி

நெற்குப்பை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் பெரிய நந்தவனம் ஊருணி, ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மாணிக்கநாச்சி ஊருணி மேம்பாட்டு பணியும், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் ஊருணி மற்றும் வரத்துக்கால்வாய் தூர்வாரும் பணியையும் பார்வையிட்டார். தொடர்ந்து சிங்கம்புணரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.1 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் செட்டிய ஊருணி, ரூ.1 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் கோவில் ஊருணி மேம்பாட்டு பணி, வேங்கைப்பட்டி சாலையில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மின்மயான வளாகத்தில் கட்டப்பட்டு வரும் எரிவாயு தகன மேடை கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

மேலும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜா, பேரூராட்சி தலைவர்கள் கோகிலாராணி, புசலான், அம்பலமுத்து, உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், பேரூராட்சி துணைத்தலைவர்கள், மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.


Next Story