சுருளி அருவியில் கலெக்டர் ஆய்வு


சுருளி அருவியில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 29 July 2023 8:00 PM GMT (Updated: 29 July 2023 8:00 PM GMT)

அடுத்த மாதம் சாரல் திருவிழா தொடங்க உள்ளதையொட்டி சுருளி அருவியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

தேனி

சாரல் திருவிழா

கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சாரல் விழா நடைபெறும். ஆனால் கொரோனா நோய் தாக்கத்தால் கடந்த 3 ஆண்டுகளாக சாரல் திருவிழா நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மீண்டும் சாரல் திருவிழா நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா உத்தரவின்பேரில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து அடுத்த மாதம் (ஆகஸ்டு) சாரல் திருவிழா நடத்த முடிவு செய்தனர்.

இதையடுத்து இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் ஷஜீவனா நேற்று ஆய்வு செய்தார். அப்போது மேடை அமைய உள்ள இடம் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை பார்வையிட்டார். இதையடுத்து உள்ளாட்சி அமைப்பினர் விரைந்து சீரமைத்து கொடுக்க வேண்டும். இதற்கு வனத்துறையினர் தேவையான ஒத்துழைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

புலிகள் தினம்

சுருளி அருவிக்கு செல்லும் சாலை, சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். ஆய்வின்போது, ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டியன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக, 13-வது உலக புலிகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சுருளி அருவி பகுதியில் கட்டப்பட்டுள்ள 2 சுற்றுச்சூழல் அங்காடிகளை கலெக்டர் ஷஜீவனா திறந்து வைத்தார். இந்த அங்காடியில் புலிகள் மற்றும் வனவிலங்குகளை காப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆடைகள் டி-ஷர்ட், கீ செயின்கள் மற்றும் துணி பைகள் போன்ற பொருட்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story