வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
x

வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்

மயிலாடுதுறை

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், மேலையூர் ஊராட்சியில் காவிரி நகர் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.47 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிமெண்டு சாலை, ரூ.17.70 லட்சத்தில் செயல்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டப்பணிகள், தோட்டக்கலை நர்சரி கார்டன் மற்றும் கருவாழக்கரை கிராமத்தில் அங்கன்வாடி, பள்ளிக்கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து செம்பனார்கோவில் குமரன் கோவில் தெற்கு தெருவில் 15- வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.8.50 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

ரேஷன் கடை

மேலும் செம்பனார்கோவில் ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள ரேஷன் கடைக்கு சென்று அங்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் தரமாக இருக்கிறதா? என்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு பொருட்கள் வாங்க காத்திருந்த பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார்‌. பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து செம்பனார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.10.73 லட்சத்தில் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவரை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி ஆணையர் மஞ்சுளா, ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன், பொறியாளர் முத்துக்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனகர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.



Next Story