மோட்டார் சைக்கிளில் சென்று ஆய்வு செய்த கலெக்டர், எம்.எல்.ஏ.


மோட்டார் சைக்கிளில் சென்று ஆய்வு செய்த கலெக்டர், எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 24 Jun 2023 5:13 PM GMT (Updated: 25 Jun 2023 6:06 AM GMT)

தெள்ளை மலை கிராமத்தில் மோட்டார்சைக்கிளில் சென்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன், நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தனர்.

வேலூர்

மலை கிராமம்

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம், துத்திகாடு ஊராட்சிக்குட்பட்ட தெள்ளை மலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

மலை கிராமம் என்பதால் முறையான சாலை வசதிகள் ஏதும் இல்லை. இதனால் அவசர சிகிச்சைகளுக்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

இந்த ஊரை சேர்ந்தவர்கள் மருத்துவமனை உள்ளிட்ட வெளியிடங்களில் இறந்துவிட்டால் அவரது உடலை கூட டோலி கட்டி தான் மலைகிராமத்திற்கு சுமந்து செல்கின்றனர்.

இவ்வாறு செல்லும் வழியில் 10 இடத்தில் காணாறுகள் செல்கிறது. ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு கிராம மக்கள் தலைமீது சுமந்தபடியே ஆற்றை கடந்து மலை பகுதிக்கு நடைபயணமாக செல்கின்றனர்.

துத்திக்காடு கிராமத்தில் இருந்து மலை கிராமத்திற்கு செல்ல ஆற்று வழி தவிர வேறு எந்த வழியும் இல்லை.

தார் சாலை

இந்த நிலையில் துத்திக்காடு முதல் தெள்ளை மலை கிராமம் வரை சாலை அமைத்துக்கொள்ள வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவு 3 அடி அகலத்தில் சாலையும், கடந்து செல்ல 9 இடங்களில் தரைப்பாலமும் அமைத்துக் கொள்ள வளத்துறையினர் மூலம் அனுமதி உடன் கூடிய தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி தார்சாலை அமைக்க நபார்டுவங்கி கிராமப்புற சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.7.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சாலை அளவீடு செய்யும் பணி செய்து முடிக்கப்பட்டது.

கலெக்டர், எம்.எல்.ஏ. ஆய்வு

தெள்ளை மலை கிராமத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ள இடத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட பீஞ்சமந்தை கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு, கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. ஜாா்த்தான்கொள்ளை, முத்தன்குடிசை, தெள்ளை மலை கிராம வழியாக துத்திக்காடு வரை சாலை அமைக்க வேண்டிய இடத்தை ஆய்வு செய்தனர்.

குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்காற்ற நிலையில் கிடந்த சாலையில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் கார்கள் செல்ல முடியாத சூழல் நிலவியது.

இதன் காரணமாக கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் மோட்டார்சைக்களில் சென்று சாலைகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, கணியம்பாடி ஒன்றியக்குழு துணை தலைவர் கஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, கவுரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story