ரேஷன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு


ரேஷன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 17 Dec 2022 6:45 PM GMT (Updated: 17 Dec 2022 6:45 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார். இதையொட்டி அவர், சிவகங்கை நகாில் உள்ள கடை எண் 1 மற்றும் ஓ.புதூர், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மல்லாக்கோட்டை, திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட சுள்ளங்குடி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளையும் ஆய்வு செய்தார். அப்போது கடைகளில் பொருட்களின் இருப்பு சரியாக உள்ளதா என்பதை சோதனை செய்தார்.

மேலும் கடைகளில் முதலுதவிப்பெட்டி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா என்றும் ஆய்வு மேற்கொண்டார். அடிப்படை வசதி இல்லாத கடைகளில், உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து தர துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்களிடம் கடைகளில் சரியான அளவில் பொருட்கள் வழங்கப்படுகிறதா? அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படுகிறதா? கடைகள் உரிய நேரத்தில் திறக்கப்படுகிறதா? கடைகளில் வாங்கும் பொருட்கள் குறித்து செல்போனுக்கு குறுந்தகவல் வருகிறதா? என்று கேட்டறிந்தார்.

பொருட்களின் தரம்

பின்னர் கலெக்டர் கூறியதாவது:- மாவட்டத்தில் 660 முழுநேரம் மற்றும் 204 பகுதிநேர ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலமாக, 4,20,792 குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப்பொருட்கள் அனைத்தும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் எண்ணிக்கை, மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடையளவு மற்றும் செயல்பாடுகள் குறித்து, மாதந்தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் குறைகள் இருப்பின், அதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீனு, மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆரம்ப சுகாதார நிலையம்

பின்னர் கலெக்டர் மல்லாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென்று ஆய்வு செய்து, உள்நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டார். அங்கு மருந்துகள் இருப்பு விவரம் மற்றும் பதிவேடுகள், தேவையான மருத்துவ உபகரணங்கள், மேம்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார்.

மேலும் முதல்-அமைச்சரின் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் பெற்று பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை குறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் கேட்டறிந்தார். மேலும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார். அப்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜய்சந்திரன் உடனிருந்தார்.


Next Story