டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கவீடுகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு


டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கவீடுகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 2 Oct 2023 7:30 PM GMT (Updated: 2 Oct 2023 7:30 PM GMT)

வீடுகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வீடுகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் சரயு பேசினார்.

கிராமசபை கூட்டம்

காந்தி ஜெயந்தியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளிலும் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் திப்பனப்பள்ளி ஊராட்சி கும்மனூர் கிராமத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் கலெக்டர் சரயு முன்னிலையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அனைவருக்கும் 100 நாள் வேலையை உறுதி செய்ய வேண்டும். அதற்கான சம்பளம் உரிய நேரத்தில் அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். சுத்தமான, சுகாதாரமான குடிநீர் அனைவருக்கும் வழங்கவும், பருவமழை காலத்தில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலை முற்றிலும் தவிர்க்க அனைத்து வீடுகளையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.

காய்ச்சல் அறிகுறி இருந்தால் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். இப்பகுதியில் தரைப்பாலம், பள்ளி சுற்றுச்சுவர், தனிநபர் வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள். கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சிறுதானிய கண்காட்சி

முன்னதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நவீன எல்.இ.டி. வாகனம் மூலம் முதல்-அமைச்சரின் உரை ஒளிபரப்பு செய்யப்பட்டதை கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம், சிறுதானிய கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் தலைமையில் அயோடின் உப்பு பயன்பாடு குறித்த உறுதிமொழியை பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் எடுத்து கொண்டனர்.

இதில் வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் மகாதேவன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மகளிர் திட்ட அலுவலர் ரகுகுமார், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட செயற்பொறியாளர் சிவமுருகன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் மரியசுத்தர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story