குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்கலெக்டர் உமா வழங்கினார்


குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்கலெக்டர் உமா வழங்கினார்
x
தினத்தந்தி 16 Oct 2023 7:00 PM GMT (Updated: 16 Oct 2023 7:01 PM GMT)

நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் உமா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல்

நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் உமா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் உமா தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 541 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். இந்த மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு ரத்த தானம் வழங்கிய 24 கொடையாளர்களுக்கும், 27 முகாம் அமைப்பாளர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7,800 மதிப்பில் நடைபயிற்சி சாதனம், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.2,500 மதிப்பில் ஊன்று கோல் என மொத்தம் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10,300 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தயாரிக்கப்பட்ட குறும்படங்களை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டதை கலெக்டர் பள்ளி மாணவ, மாணவிகளுடன் பார்வையிட்டார். தொடர்ந்து மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது.

இதில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story