தேவிபாளையம் பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

பரமத்தி பேரூராட்சிக்குட்பட்ட தேவிபாளையம் பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பரமத்தி பேரூராட்சிக்குட்பட்ட தேவிபாளையம் பகுதிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பஸ் வசதி வேண்டும்
பரமத்தி பேரூராட்சிக்குட்பட்ட தேவிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று பள்ளி மாணவ, மாணவிகளுடன் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் உமாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-
தேவிபாளையம் கிராமத்தில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வருகிறோம். எங்கள் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பரமத்தி அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். போதிய பஸ் வசதி இல்லாததால் சுமார் 4 கி.மீட்டர் தூரத்துக்கு நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியவில்லை. மேலும் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது. எனவே எங்கள் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நலன்கருதி அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பு
நாமக்கல் அருகே ரெட்டிப்பட்டி கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எருமப்பட்டி ஒன்றியம் ரெட்டிப்பட்டியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக ஊர் பொது கிணற்றுக்கு அருகில், அரசு புறம்போக்கு `தண்ணீர் குட்டை கிணறு' உள்ளது. அந்த தண்ணீர் குட்டை கிணற்றை ஆக்கிரமிப்பு செய்து சிலர் விவசாயம் மேற்கொண்டு உள்ளனர்.
மழைக்காலங்களில், குட்டை கிணற்றுக்கு வரும் நீர்வழிப்பாதைகளை அடைத்து விடுகின்றனர். அதனால், கிராமத்திற்கு நீர் ஆதாரமாக உள்ள பொதுகிணறு, கோடைகாலங்களில் வறண்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மேலும் குட்டை கிணற்றுக்கு தென்புற கரையானது, பொது வண்டிப்பாதையாக, விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது வண்டிப்பாதையும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால், பொதுமக்கள், விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
பொதுமக்கள், விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றியும், தண்ணீர் குட்டை கிணற்றை தூர்வாரி, வரும் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு குறைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
பாவடி நிலம்
பரமத்திவேலூர் அருகே உள்ள சோழசிராமணி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களது கிராமத்தில் உள்ள பாவடி நிலத்தில் (அரசு நிலம்) சுமார் 150 ஆண்டுகளுக்கு மேல் பாவு தோய்தல் பணியை செய்து வருகிறோம். தற்போது அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்து வருகின்றனர். எனவே அரசு நிலத்தை பாவடி நிலமாக பெயர் மாற்றம் செய்து, பட்டா வழங்க தக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.






