சேத்தியாத்தோப்பு அருகே கல்லூரி உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை

சேத்தியாத்தோப்பு அருகே மதுகுடித்து விட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் கல்லூரி உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேத்தியாத்தோப்பு,
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த அம்மன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆசீர்வாதம் மகன் மார்ட்டின் ஜோசப்(வயது 40). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி அருள்மேரி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்ட்டின் ஜோசப், தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது அவர் தினசரி மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினமும் மார்ட்டின் ஜோசப், மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதை மனைவி அருள்மேரி கண்டித்ததாக தெரிகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மனம் உடைந்த மார்ட்டின் ஜோசப் தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும், சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.