பேச்சுப்போட்டியில் கல்லூரி மாணவிகள் முதலிடம்


பேச்சுப்போட்டியில் கல்லூரி மாணவிகள் முதலிடம்
x

பேச்சுப்போட்டியில் கல்லூரி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.

பெரம்பலூர்

பேச்சுப்போட்டி

தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நேற்று நடத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள பாரத சாரணர் மாவட்ட பயிற்சி மையத்திலும், அரியலூர் மாவட்டத்திற்கு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் போட்டிகள் நடந்தன.

பெரம்பலூரில் நடந்த பேச்சுப்போட்டிக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் உதவி இயக்குனர் சித்ரா தலைமை தாங்கினார். அரியலூரில் நடந்த பேச்சுப்போட்டிக்கு அரியலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவி பேராசியா் தமிழ்மாறன் தலைமை தாங்கினார். பெரம்பலூர்-அரியலூரில் நடந்த பேச்சு போட்டியில் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணா பற்றி பேசினர்.

முதலிடம்

இதில் பெரம்பலூரில் நடந்த பேச்சுப்போட்டியில் முதல் இடத்தை பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியின் உயிர் தொழில்நுட்பவியல் 3-ம் ஆண்டு மாணவி சம்ரிதாவும், 2-ம் இடத்தை வேப்பந்தட்டை அரசு கலை-அறிவியல் கல்லூரியின் பி.காம் 2-ம் ஆண்டு மாணவர் சதீசும், 3-ம் இடத்தை பெரம்பலூர் சீனிவாசன் கலை-அறிவியல் கல்லூரியில் உயிர் தொழில்நுட்பவியல் 2-ம் ஆண்டு மாணவர் ஜாபர் சாதிக்கும் பிடித்தனர்.

இதே போல் அரியலூரில் நடந்த பேச்சுப்போட்டியில் முதல் இடத்தை தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வியியல் கல்லூரியின் இளங்கல்வியியல் 2-ம் ஆண்டு மாணவி பவித்ராவும், ஜெயங்கொண்டம் அரசு கலை-அறிவியல் கல்லூரியின் இளங்கலை தமிழ் 3-ம் ஆண்டு மாணவி கவுதமியும், 3-ம் இடத்தை ஜெயங்கொண்டம் நேஷனல் கலை-அறிவியல் கல்லூரியின் இளங்கலை தமிழ் 2-ம் ஆண்டு மாணவி இளந்தென்றலும் பிடித்தனர்.

ரொக்கப்பரிசு

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. இதேபோல் பெரம்பலூர்-அரியலூரில் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி வருகிற 19-ந்தேதி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெறுவதால் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறந்தவுடன் பேச்சுப்போட்டி நடத்தப்படவுள்ளது.


Next Story