கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

மோகனூர் அருகே தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

மோகனூர்

கல்லூரி மாணவி

மோகனூர் அருகே ராசிபாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 45). லாரி டிரைவர். இவரது மனைவி சித்ரா (42). இந்த தம்பதியருக்கு மோகன்ராஜ் என்ற மகனும், சந்தியா (21) என்ற மகளும் இருந்தனர். இதில் மோகன்ராஜ் லண்டனில் படித்து வருகிறார். சந்தியா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். ஒரு வாரம் அங்கேயே தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். அதன்பிறகு அவர் கல்லூரிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

அதையடுத்து சந்தியா கடந்த ஜூலை மாதம் கோவை தனியார் கல்லூரியில் சேர்ந்து அதே படிப்பை தொடர்ந்தார். இந்தநிலையில் அவர், தன்னால் பெற்றோருக்கு செலவும், அலைச்சலும் அதிகரிப்பதாக புலம்பி மன வேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது.

தற்கொலை

இந்நிலையில் நேற்றுமுன்தினம் சந்தியா வீட்டில் மதியம் தூங்க சென்றவர் மாலை வரை எழுந்திருக்கவில்லை. சந்தேகம் அடைந்த அவரது தாயார் சித்ரா கதவை தட்டி எழுப்பி உள்ளார். ஆனால் எவ்வித பதிலும் வரவில்லை. பின்னர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சந்தியா சேலையில் தூக்கிட்டு பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சந்தியா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story