ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி பலி


ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி பலி
x

மணப்பாறை அருகே தாய், தங்கையுடன் பயணம் செய்த கல்லூரி மாணவி, ரெயிலில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

திருச்சி,

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடத்தை சேர்ந்தவர் ரஹமத்துல்லா. இவரது மனைவி ஆசியா பேகம். இவர்களுக்கு ஆயிஷா சித்தீக்கா (வயது 19) உள்பட 2 மகள்கள். இதில் ஆயிஷா சித்தீக்கா சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆசியா பேகம் மற்றும் அவரது மகள்கள் என 3 பேரும் திண்டுக்கல்லில் இருந்து சிதம்பரம் நோக்கி மஹால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தனர். அந்த ரெயில் மணப்பாறை ரெயில் நிலையத்தை கடந்து சற்று தூரம் சென்ற நிலையில், சாப்பிட்டு விட்டு கை கழுவ சென்ற ஆயிஷா சித்தீக்கா, பின்னர் அவரது இருக்கைக்கு திரும்பவில்லை.

இறந்து கிடந்தார்

இதனால் பதறிப்போன ஆசியா பேகமும், அவரது மற்றொரு மகளும் திருச்சி ரெயில் நிலையத்தில் ரெயிலில் இருந்து இறங்கினர். மேலும் இது பற்றி உறவினர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அனைவரும் நள்ளிரவில் இருந்தே ஆயிஷா சித்தீக்காவை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று காலை மணப்பாறையை அடுத்த கள்ளிப்பட்டி அருகே இளம்பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு இறந்து கிடந்தது ஆயிஷா சித்தீக்கா என்பது தெரியவந்தது. இது பற்றி திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தவறி விழுந்து...

அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் ஆயிஷா சித்தீக்கா ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரியவந்தது. இதையடுத்து ஆயிஷா சித்தீக்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.


Next Story