கல்லூரி மாணவரை கடத்தி ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் கல்லூரி மாணவரை கடத்தி ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
குனியமுத்தூர்
கோவையில் கல்லூரி மாணவரை கடத்தி ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கல்லூரி மாணவர்
கோவை மாவட்டம் காரமடை அருகே காளட்டியூரை சேர்ந்தவர் தீபக் ஈஸ்வரன் (வயது 20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3-வது ஆண்டு படித்து வரு கிறார்.
இதற்காக இவர் தனது நண்பர்களுடன் குனியமுத்தூரில் உள்ள பி.கே.புதூரில் அறை எடுத்து தங்கி வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி இரவில் தீபக் ஈஸ்வரன் தங்கி இருக்கும் அறைக்குள் அவருடன் படிக்கும் 2 மாணவர்கள் உள்பட 6 பேர் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் அவர்கள், தீபக்ஈஸ்வரனிடம் கஞ்சா இருக்கிறதா என்று கேட்டனர்.
ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல்
அதற்கு அவர் என்னிடம் கஞ்சா இல்லை என்று கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 6 பேரும் சேர்ந்து சத்தம் போட்டால் கம்பியால் அடித்து கொலை செய்து விடுவோம் என்று கூறி மிரட்டினர். பின்னர் அவரை அங்குள்ள ஒரு அறைக்கு கடத்திச்சென்றனர்.
அங்கு அவரிடம் கஞ்சா விற்பனை மூலம் உனக்கு அதிக வருமா னம் வருவது எங்களுக்கு தெரியும். எனவே ரூ.15 லட்சம் கொடுத் தால் விட்டு விடுவோம். இல்லை என்றால் விட மாட்டோம் என்று கூறி மிரட்டி அந்த அறைக்குள் தீபக்ஈஸ்வரனை அடைத்து வைத்தனர்.
4 பேர் கைது
மேலும் அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான 3 செல்போன்களை பறித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி வந்த தீபக் ஈஸ்வரன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக் ஈஸ்வரனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கல்லூரி மாணவர்கள் செல்டன் (20), ஹரீஷ் (20), மற்றும் கூலி வேலை செய்து வரும் சரவணன் (19), சதாம் உசேன் (31) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
தலை மறைவான பினாஸ், ஷியாம் ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கல்லூரி மாணவரை கடத்தி ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






