கல்லூரி மாணவர் குத்திக்கொலை; தந்தைக்கு வலைவீச்சு


கல்லூரி மாணவர் குத்திக்கொலை; தந்தைக்கு வலைவீச்சு
x

கல்லூரி மாணவர் குத்திக்கொன்ற தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

சமயபுரம்:

கல்லூரி மாணவர்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவரங்கபட்டியை சேர்ந்தவர் முத்துச்செல்வன்(வயது 45). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி அமிர்தம்(40). இவர்களது மகன் ரவி என்ற பெரியசாமி(19). இவர் திருச்சி அரியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மெக்கானிக் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான முத்துச்செல்வன் தினமும் குடித்துவிட்டு வந்து, அமிர்தத்திடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனை அவ்வப்போது ரவி தட்டிக்கேட்டுள்ளார். இதேபோல் கடந்த 17-ந் தேதி முத்துச்செல்வன் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

சாவு

அப்போது, 'தினமும் குடித்துவிட்டு வந்து, அம்மாவிடம் ஏன் தகராறு செய்கிறீர்கள்? என்று கேட்டு முத்துச்செல்வனை, ரவி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துச்செல்வன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ரவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேல்சிகிச்சைக்காக சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த அமிர்தம், மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள், அவரை தடுத்து நிறுத்தினர்.

வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராமன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து முத்துச்செல்வனை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story