மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஓட்டல் ஊழியர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஓட்டல் ஊழியர் பலி
x
தினத்தந்தி 29 Aug 2023 6:45 PM GMT (Updated: 29 Aug 2023 6:45 PM GMT)

வாணாபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஓட்டல் ஊழியர் பரிதாபமாக இறந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி

வாணாபுரம்,

மதுரை மாவட்டம் பந்தலக்குடியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் நிவேதிதன் (வயது 31). இவர் பகண்டை கூட்டுரோட்டில் தங்கி அங்குள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவர் பகண்டைகூட்டுரோட்டில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

வாணாபுரம் அருகே மையனூர் தீவாங்குளம் பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக முன்னாள் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இந்த விபத்தில் நிவேதிதன் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்ற குழந்தைராஜ், அவரது மனைவி மற்றும் மகன்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் நிவேதிதன் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதனிடையே கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் குழந்தைராஜ் உள்ளிட்ட 4 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் பகண்டைகூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story