தர்மபுரி வன அலுவலகத்தில்பெண் யானைகளின் கோரைப்பற்கள் தீயிட்டு எரிப்பு


தர்மபுரி வன அலுவலகத்தில்பெண் யானைகளின் கோரைப்பற்கள் தீயிட்டு எரிப்பு
x
தினத்தந்தி 21 July 2023 7:30 PM GMT (Updated: 21 July 2023 7:31 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச்சரகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மற்றும் 2021-ம் ஆண்டு உடல் நல குறைவால் உயிரிழந்த 20 வயது மதிக்கதக்க பெண் யானைகளின் கோரைப்பற்கள் எனப்படும் தந்தங்கள் தர்மபுரியில் உள்ள மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இந்த பெண் யானைகளின் கோரைப்பற்கள் மாவட்ட வன அலுவலர் வளாகத்தில் மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு தலைமையில், தர்மபுரி வனச்சரக அலுவலர் அருண்பிரசாத், பென்னாகரம் வனச்சரக அலுவலர் ராஜ்குமார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த தன்னார்வலர்கள் முன்னிலையில் நேற்று மாலை விறகுகளை அடுக்கி தீயிட்டு அழிக்கப்பட்டது. இந்த கோரைப்பற்கள் அனைத்தும் முழுமையாக எரிந்து சாம்பலான பிறகு வன அலுவலர்கள் அங்கிருந்து கலைக்கு சென்றனர். ஆண் யானைகளுக்கு தந்தம் என்றும், பெண் யானைகளுக்கு கோரைபற்கள் என்றும் அழைக்கப்படுகிறது. எரிக்கப்பட்ட இந்த தந்தங்கள் 13 சென்டிமீட்டர் முதல் 30 சென்டிமீட்டர் நீளமும், 10 சென்டிமீட்டர் சுற்றளவும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story