கூட்டுக்குடிநீர் திட்ட குழாயை சீரமைக்கும் பணி தொடக்கம்


கூட்டுக்குடிநீர் திட்ட குழாயை சீரமைக்கும் பணி தொடக்கம்
x

கூட்டுக்குடிநீர் திட்ட குழாயை சீரமைக்கும் பணி தொடங்கியது.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் பகுதியில் இருந்து ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், ஆண்டிமடம், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்ட குழாய்கள் நீண்ட நாட்களாக சரியாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாமல், பல்வேறு இடங்களில் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு நீர்க்கசிவு ஏற்பட்டதோடு, அதிக அளவில் குடிநீர் வெளியேறி வீணாகும் நிலை உள்ளது.

இந்நிலையில் தா.பழூர் அருகே சிந்தாமணி காட்டாற்று ஓடையின் மேற்பகுதியில் உள்ள கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் வெடிப்பு ஏற்பட்டு அதிக அளவு தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. இது குறித்து 'தினத்தந்தி' நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள், அந்த குழாயை சீரமைக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து சிந்தாமணி குடிநீர் குழாய் உடைப்பு மட்டுமின்றி, எங்கெங்கெல்லாம் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுகிறதோ அங்கெல்லாம் அந்த குழாய்களை விரைவில் சரி செய்ய வேண்டும் என்றும், குடிநீர் விரையமாகாமல் அதிகாரிகள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும், கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீரை பயன்படுத்தும் அனைவருக்கும் பாதுகாப்பான, சுகாதாரமான குடிநீர் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.


Next Story