வீடு தேடிவந்து வழங்கும் திட்டத்தில் மகப்பேறு உதவித்தொகை, ஊட்டச்சத்து பொருட்கள் முறையாக கிடைக்கிறதா?; கர்ப்பிணி, பெண்கள் கருத்து


வீடு தேடிவந்து வழங்கும் திட்டத்தில் மகப்பேறு உதவித்தொகை, ஊட்டச்சத்து பொருட்கள் முறையாக கிடைக்கிறதா?; கர்ப்பிணி, பெண்கள் கருத்து
x
தினத்தந்தி 12 March 2023 8:30 PM GMT (Updated: 12 March 2023 8:30 PM GMT)

வீடு தேடிவந்து வழங்கும் திட்டத்தில் மகப்பேறு உதவித்தொகை, ஊட்டச்சத்து பொருட்கள் முறையாக கிடைக்கிறதா? என்பது குறித்து கர்ப்பிணி, பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

தமிழ்நாட்டில் கர்ப்பிணிகள் மற்றும் 2 வயது முதல் 6 வயது குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்காக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் சத்துமாவு கலவைகள் வழங்கப்படுகின்றன.

சத்துமாவு கலவை

கோதுமை மாவு (45.50 கிராம்), வறுத்த கேழ்வரகு மாவு (6 கிராம்), செறிவூட்டப்பட்ட பாமாயில் எண்ணெய் (5 மி.லி.), முளைகட்டிய கேழ்வரகு மாவு (5 கிராம்), கொழுப்பு நீக்கப்படாத சோயா மாவு (10.50 கிராம்), வெல்லம் (27 கிராம்), தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் (1 கிராம்) ஆகிய 7 பொருட்கள் அடங்கிய சத்துமாவு கலவை தயாரிக்கப்பட்டு அங்கன்வாடி மையங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனையின் பேரில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்து மாவின் தரம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் வறுத்த கடலை மாவு (10 கிராம்), வறுத்த உளுந்தம் பருப்பு மாவு (5 கிராம்), வறுத்த வேர்க்கடலை மாவு (4 கிராம்) ஆகிய 3 மூலப்பொருட்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் கோதுமை, சோயா மாவு வறுத்து சேர்க்கப்பட்டு இருக்கிறது.

புது வடிவம்

2 வயது முதல் 6 வயது குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சத்துமாவும் புது வடிவம் பெற்றுள்ளது. இதில் வறுத்த கோதுமை மாவு, வெல்லத்தூள், வறுத்த சோயா மாவு, வறுத்த நிலக்கடலை மாவு, முளைக்கட்டிய கேழ்வரகு மாவு, தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் ஆகிய மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

முன்பு வெள்ளை நிறத்தில் இருந்த சத்துமாவு 'பாக்கெட்' தற்போது கலர்புல்லாக மாறி உள்ளது. என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன? என்பது எழுத்தாகவும், படமாகவும் 'பாக்கெட்' கவரில் பளிச்சென்று அச்சிடப்பட்டுள்ளது.

மேலும் என்னென்ன ஊட்டச்சத்துகள் அடங்கி உள்ளன? என்ற விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மிகவும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 6 மாதத்துக்கு உட்பட்ட பச்சிளம் குழந்தையின் தாய்மார்களுக்கு சத்து டானிக், புரோட்டீன் பவுடர், நெய், பேரீச்சம் பழம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பெட்டகம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேம்படுத்தப்பட்ட இந்த ஊட்டச்சத்து திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 28-ந் தேதி தொடங்கி வைத்தார். இந்த ஊட்டச்சத்து பொருட்கள் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று வழங்க வேண்டும் என்று அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

அதன்படி வீடு தேடி இந்த பொருட்கள் வருகிறதா? உதவித்தொகை முறையாக கிடைக்கிறதா? என்பது குறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினர் கூறிய கருத்துகள் வருமாறு:-

ஊட்டச்சத்து குறைபாடு

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி:- திண்டுக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்கும் வகையில் கடந்த 1-ந்தேதி முதல் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை 1,100-க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்து பெட்டகங்கள் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஊட்டச்சத்து பொருட்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அவற்றை எந்தெந்த நேரங்களில் எந்த அளவுகளில் சாப்பிட வேண்டும் என்றும் கர்ப்பிணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதோடு ஊட்டச்சத்து பொருட்களை அவர்கள் முறையாக சாப்பிடுகிறார்களா? என்பதை உறுதி செய்யும் வகையில் தினமும் அவர்களை செல்போனில் தொடர்புகொண்டு பேசி வருகிறோம். இதற்காக தனிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் கர்ப்பிணிகளிடம் பேசி அவர்கள் ஊட்டச்சத்து பொருட்களை முறையாக சாப்பிடுவதை உறுதிப்படுத்துகின்றனர். ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாவட்டமாக திண்டுக்கல்லை உருவாக்குவதே குறிக்கோள்.

பாராட்டுக்குரியது

கோபால்பட்டியை சேர்ந்த கர்ப்பிணி கீதாஞ்சலி:- கர்ப்பிணிகளின் நலனை கருத்தில் கொண்டே ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு வழங்கும் ஊட்டச்சத்து பெட்டங்களில் இருக்கும் பொருட்களை சாப்பிடுவதன் மூலம் குழந்தை ஆரோக்கியமாக ஊட்டச்சத்து குறைபாடு இன்றி பிறக்கும். மேலும் கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் அடிக்கடி வாந்தி வரும். இதனால் உடலுக்கு போதிய சக்தி கிடைக்காது. அரசு சார்பில் வழங்கப்படும் சத்துகள் நிறைந்த மூலப்பொருட்கள் அடங்கிய கலவை உடல்சோர்வை போக்குகிறது. எனவே அரசின் இந்த திட்டத்தை வரவேற்கிறேன். மேலும் இந்த ஊட்டச்சத்து பெட்டகங்களை வீடி தேடி வந்து கொடுப்பது பாராட்டுக்குரியது.

சத்தான உணவுகள்

பழனி அங்கன்வாடி பணியாளர் செந்தில்வடிவு:- குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் ஊட்டச்சத்து பொருட்களை அவர்களின் வீட்டுக்கே கொண்டு சென்று வழங்குகிறோம். 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளே ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். ஊட்டச்சத்து அளிக்கும் பொருட்டே சத்தான உணவுகளை அவர்களுக்கு கொடுக்கிறோம். தற்போது தரம் உயர்த்தப்பட்ட சத்து மாவு பாக்கெட்டுகளை கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்குகிறோம். இந்த சத்து மாவை 150 கிராம் அளவுக்கு கஞ்சியாகவோ அல்லது கொளுக்கட்டை போன்றோ சமைத்து அன்றாடம் சாப்பிட வேண்டும் என்று கர்ப்பிணிகளிடம் அறிவுறுத்துகிறோம்.

அதேபோல் அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளுக்கு 50 கிராம் அளவுக்கு சத்து மாவை கொளுக்கட்டை போன்று செய்து கொடுக்கிறோம். வீடு தேடி சென்று கொடுப்பதால் அவர்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி சாப்பிடுகின்றனர். ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற எங்களின் எண்ணமும் நிறைவேறுகிறது.

கர்ப்பகால ஆலோசனை

திண்டுக்கல் அனுமந்தநகரை சேர்ந்த அழகேஷ்வரி:- கர்ப்பம் தரித்ததும் தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் 'பிக்மி' எண்ணுக்கு பதிவு செய்ய வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதன்படி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 'பிக்மி ' எண்ணுக்காக பதிவு செய்தேன். அதன் பிறகு சுகாதார பணியாளர்களும், அங்கன்வாடி பணியாளர்களும் அக்கறையுடன் ஆலோசனை வழங்கினர்.

மேலும் கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரைகளை வழங்கினார்கள். அதோடு மட்டும் இல்லாமல் ஊட்டச்சத்து பவுடரை வீட்டுக்கே வந்து கொடுக்கின்றனர். இந்த பவுடர் மிகவும் தரமாக இருக்கிறது. உன்னதமான ஊட்டச்சத்து திட்டத்தை மேலும் மெருகேற்றிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி. இதுமட்டுமின்றி 'பிக்மி' எண் பெற்று அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் பிரசவ கால சிகிச்சை மற்றும் பிரசவம், குழந்தை தடுப்பூசி ஆகியவற்றை மேற்கொள்ளும் பெண்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் ரூ.18 ஆயிரம் 5 தவணைகளாக வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story