6 இலக்க எண்களுடன் 'ஹால் மார்க்' கட்டாயம்; தங்க நகை வாங்கும்போது குழப்பமா? நம்பிக்கையா?-வாடிக்கையாளர், விற்பனையாளர் கருத்து


6 இலக்க எண்களுடன் ஹால் மார்க் கட்டாயம்; தங்க நகை வாங்கும்போது குழப்பமா? நம்பிக்கையா?-வாடிக்கையாளர், விற்பனையாளர் கருத்து
x
தினத்தந்தி 1 April 2023 8:30 PM GMT (Updated: 1 April 2023 8:30 PM GMT)

6 இலக்க எண்களுடன் ‘ஹால் மார்க்' கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தங்க நகை வாங்கும்போது குழப்பமா? நம்பிக்கையா? என்பது குறித்து வாடிக்கையாளர், விற்பனையாளர் கருத்து தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்களின் தரத்தை கண்காணிக்க, 1947-ம் ஆண்டு இந்திய தரநிர்ணய அமைப்பு (ஐ.எஸ்.ஐ.) உருவாக்கப்பட்டது. பெருகிவரும் வளர்ச்சிக்கு ஏற்ப இந்த அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் 1986-ம் ஆண்டு இந்திய தரநிர்ணய அமைவனச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அது 1987-ல் இந்திய தரநிர்ணய அமைப்பாக (பி.ஐ.எஸ்.) மாற்றம் செய்யப்பட்டது.

நோக்கம்

பொருட்களின் தரத்தை தேசிய அளவில் நிர்ணயம் செய்து தரச் சான்றிதழ் வழங்குவதுடன் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவது, சர்வதேச அளவில் இந்திய பொருட்களின் தரத்திற்கு உத்திரவாதம் அளித்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு உறுதுணையாக இருப்பது போன்றவைதான் அதன் நோக்கம் ஆகும்.

இவ்வாறு பல்வேறு உலோகப் பொருட்கள், உணவுப் பொருட்களுக்கு எல்லாம் தரநிர்ணயம் செய்யப்பட்ட போதிலும் தங்கத்திற்கு மட்டும் தரநிர்ணயம் செய்ய போதுமான வழிமுறைகள் செய்யப்படாமல் இருந்து வந்தது.

சேதார இழப்பு

தங்கத்தைப் பொறுத்த அளவில் 24 கேரட் சுத்தத் தங்கத்தை நேரடியாக அணிகலன்களாக செய்ய முடியாது. அதனுடன் செம்பு மற்றும் வெள்ளி போன்ற பிற உலோகங்களை கலந்து 22 கேரட் அளவிற்கு தங்கத்தை மாற்றம் செய்த பிறகே அதனை வளைத்து நெளித்து மக்கள் விரும்பும் வகையிலான அணிகலன்களை செய்ய முடியும்.

இதனை பயன்படுத்தி தங்கத்தை வாங்கும் மக்களிடம் செய்கூலி, சேதாரம் என கூடுதலான பணத்தை பெற்ற போதிலும், விற்பனை செய்யும் வியாபாரிக்கு வியாபாரி தங்கத்தின் தரம் வேறுபட்டே காணப்பட்டு வந்தது.

உதாரணமாக ஒரு வியாபாரியிடம் வாங்கிய தங்க நகையை கொஞ்சநாள் கழித்து விற்பனை செய்கிறோம். அதற்கு பதிலாக புதிய நகைகளை வாங்குகிறோம். அப்போது அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? நாம் கொடுத்த நகையில் அதிக அளவில் சேதாரத்தை கழித்து தங்கத்தின் மதிப்பை குறைத்துக் கூறி கூடுதலாக பணத்தை பெற்றுக் கொண்ட பின்னரே புதிய தங்க நகைகளைத் தருகிறார்கள்.

ஹால்மார்க் முத்திரை

இதுபோன்ற பிரச்சினைகளை களைய இந்திய தரநிர்ணய அமைப்பு சார்பில் கடந்த 2000 ஆண்டு முதல் 'பி.ஐ.எஸ். ஹால்மார்க்' என்ற பெயரில் ஹால்மார்க் நிர்ணயம் செய்யும் முறை அமுலுக்கு வந்தது.

இதனால், தங்க நகை உற்பத்தியாளர்கள் உருவாக்கும் ஆபரணங்களை இந்திய தரநிர்ணய மையங்களில் காண்பித்து அவற்றின் தரத்தை சோதனை செய்து, ஹால்மார்க் முத்திரையை பெற்று விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இத்தகைய ஹால்மார்க் முத்திரை பெறப்பட்ட நகைகளை மக்கள் மறுவிற்பனை செய்து புதிய வடிவத்தில் நகைகளை பெறும் போது பெரும் அளவில் சேதாரம் கழிக்கப்படாமல் மக்களின் பணம் மிச்சப்படுத்தப்பட்டது.

இவ்வாறு ஹால்மார்க் முத்திரையிடப்படும் நகைகளில் 4 அடையாளங்கள் இடப்பட்டு வந்தன. அதில் முதல் அடையாளம் இந்திய தரநிர்ணய அமைப்பு குறியீடு, 2-வது அடையாளம் தங்கத்தின் தூய்மையை குறிக்கும். 3-வது அடையாளம் ஹால் மார்க்கிங் மையத்தையும், 4-வது அடையாளம் தங்க நகையை விற்பனை செய்யும் கடையையும் குறிக்கும்.

தனித்த அடையாள எண்

இந்த நிலையில், ஏப்ரல் 1-ந் தேதி (நேற்று) முதல் 6 இலக்க தனித்த அடையாள எண்ணுடன் (எச்.யூ.ஐ.டி.) ஹால்மார்க் முத்திரை பெறப்பட்ட நகைகளை மட்டுமே கடைகளில் விற்பனை செய்ய முடியும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. புதிய முறையில் வழங்கப்படும் ஹால்மார்க் முத்திரையில் 3 அடையாளங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. முதல் 2 அடையாளங்கள் ஹால்மார்க் முத்திரை வழங்கிய மையத்தையும், நகையை தயாரித்த கடையையும் குறிக்கும். 3-வது அடையாளமானது 6 இலக்க தனித்த அடையாள எண் (எச்.யூ.ஐ.டி.) ஆகும்.

இந்த 6 இலக்க தனித்த அடையாள எண்ணை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள 'பிஸ் கேர்' (BIS CARE) செயலியில் சோதனை செய்து பார்க்கும்போது தங்க நகையின் மொத்த தகவலும் தெரிந்துவிடும்.

அதாவது நகைக் கடையின் பெயர், முகவரி, ஹால்மார்க் முத்திரை வழங்கிய மையத்தின் பெயர், நகைக் கடையின் பதிவு எண், ஹால்மார்க் முத்திரை வழங்கிய மையத்தின் அங்கீகார எண், எந்த தேதியில் ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டது, ஆபரணத்தின் பெயர் (மோதிரம், கம்மல், செயின்), முக்கியமாக நகையின் தூய்மை மற்றும் கேரட் அளவு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தெரிந்துவிடும்.

இதன் மூலம் பொதுமக்கள் இனி வாங்கப் போகும் நகையின் துய்மை, தரம் உள்ளிட்ட விவரங்களை நகையை வாங்கும் முன்பே 'பிஸ் கேர்' செயலி மூலம் தெரிந்து கொண்டு நகைகளை வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அறிமுகமாகி இருக்கும் 6 இலக்க தனித்த அடையாள எண்ணுடன் (எச்.யூ.ஐ.டி.) கூடிய ஹால்மார்க் முத்திரை பொதுமக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ குழப்பத்தை ஏற்படுத்துகிறதா? அல்லது நம்பிக்கை தருகிறதா? என்பது குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை பார்ப்போம்.

மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும்

திண்டுக்கல் ஸ்ரீவாசவி தங்க நகை மாளிகை உரிமையாளர் மேடா என்.ரவி கூறியதாவது:-

புதிய ஹால்மார்க் முத்திரை பெறுவதற்கு 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. எனவே நாங்கள் புதிய ஹால்மார்க் முத்திரை பெற்று விட்டோம். இந்த புதிய நடைமுறை மூலம் மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும். நகைகளை வாங்கும் முன்பே ஹால்மார்க் யூனிக் எண்ணை கொண்டு இணையதளத்தில் சோதனை செய்து கொள்ளலாம். அதன் மூலம் நகையின் தரம் மற்றும் எடையை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். இது பொதுமக்களுக்கு நகை மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். எனவே இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள நடைமுறையாகும். புதிய ஹால்மார்க் முத்திரை நடைமுறையால் நகைக்கடைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. நியாயமான முறையில் நகை வியாபாரம் நடைபெறும். பொதுமக்களுக்கு தரமான நகைகள் கிடைக்கும்.

குடும்ப தலைவி சரண்யா (பழனி):- தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயம் என அரசு அறிவித்தது மிகவும் வரவேற்கத்தக்கது. இதன்மூலம் தரமான நகைகளை மக்கள் வாங்க முடியும். அதேபோல் நகையை மறு விற்பனை செய்யும் போதும் பேரம் பேசி வாங்குவது தவிர்க்கப்படும். நமக்கு சரியான விலையும் கிடைக்கும். மேலும் திருட்டு நகைகள், தரமற்ற நகைகள் விற்கப்படுவது முற்றிலும் தடுக்கப்படும். அதேநேரம் ஹால்மார்க் முத்திரை இல்லாத பழைய நகைகள் விற்பனையின் போது உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

விலை உயரும்

குடும்ப தலைவி நாகஜோதி (நிலக்கோட்டை):- இந்திய பெண்கள் அனைவரும் தங்க நகை அணிவதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகின்றனர். பெண்களுக்கு அவசர தேவைக்கு பெரும் உதவியாக தங்க நகைகள் இருக்கின்றன. இந்தநிலையில் ஹால்மார்க் நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என்ற உத்தரவால் நகைகளுக்கு கூடுதல் கட்டணம், வரி செலுத்த வேண்டியது ஏற்படும். ஏழைகளுக்கு கூடுதல் செலவாகி விடும். அதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்பாக தங்கத்தின் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடும்ப தலைவி சர்மிளா அசோக்ராஜ் (ராஜக்காப்பட்டி):- ஒரு குடும்பத்தின் உழைப்பில் ஒரு பகுதி வருமானத்தை தங்கத்தை வாங்கி சேமிப்பது பெண்கள் தான். ஆனால் தங்க நகைகள் போலியா? அல்லது தரமானதா? என்ற சந்தேகம் மக்களிடம் எப்போதும் இருக்கிறது. அதை தீர்த்து வைத்து நகைகள் தரமானவை என்பதற்காக ஹால்மார்க் முத்திரையை பதிக்க சொல்வது வரவேற்கத்தக்கது தான். பொதுமக்கள் ஏமாறாமல் தரமான தங்கம் வாங்க உதவியாக இருக்கும். அதேநேரம் ஏற்கனவே விலை உயர்ந்த தங்கம், ஹால்மார்க் முத்திரை மற்றும் வரியால் விலை அதிகரிக்கும். எனவே ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் தங்கத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்திரையிட வசதி

ஜோஸ்பின் சேவியர் (செந்துறை) :- புதிய ஹால்மார்க் முத்திரை மிகவும் பயனுள்ளது என்று கூறுகிறார்கள். தங்க நகைகளின் தரம் மற்றும் மதிப்பை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும் என்பதால் நகையின் மீது நம்பிக்கை ஏற்படும். நகைக்கடைகளில் செய்கூலி, சேதாராம் தள்ளுபடி என்று கூறி ஹால்மார்க் முத்திரை இல்லாத தரம் குறைந்த நகைகளை இனிமேல் விற்க முடியாது. எந்த நகைக்கடையில் வாங்கினாலும் தரமான நகையே கிடைக்கும் என்ற நிலை ஏற்படும். அதேநேரம் ஏற்கனவே வாங்கிய ஹால்மார்க் முத்திரை இல்லாத நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையிட போதிய வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். அதேபோல் பழைய ஹால்மார்க் முத்திரையுடன் வாங்கிய நகைகளை விற்கும் போது குறைந்த விலையில் வாங்கும் சூழ்நிலை ஏற்படக் கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story