பள்ளிக்கூடங்களில் சீருடை திட்டம் முறையாக செயல்படுகிறதா?; பெற்றோர், ஆசிரியர்கள் கருத்து


பள்ளிக்கூடங்களில் சீருடை திட்டம் முறையாக செயல்படுகிறதா?; பெற்றோர், ஆசிரியர்கள் கருத்து
x
தினத்தந்தி 20 Jun 2023 9:00 PM GMT (Updated: 20 Jun 2023 9:01 PM GMT)

பள்ளிக்கூடங்களில் சீருடை திட்டம் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்து பெற்றோர், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

கல்வித்துறையில் தமிழகம் பெற்றுவரும் வளர்ச்சிக்கு வித்திட்டவர் பெருந்தலைவர் காமராஜர். அவர் முதல்-அமைச்சராக இருந்த போதுதான் மதிய உணவு, இலவச சீருடை, பள்ளி சீரமைப்பு இயக்கம் உள்ளிட்ட முக்கியமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அனைவரும் சமம்

பள்ளிக்கூடம் என்று வந்துவிட்டால் ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், சாதி, மதம், இனம் வேறுபாடின்றி அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் சீருடை முறையை காமராஜர் கொண்டு வந்தார்.

குறிப்பாக தமிழக பள்ளிகளில் சீருடை 1964–-1965-ம் கல்வியாண்டில் கொண்டுவரப்பட்டது. அது அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள், உதவிபெறும் தனியார் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது.

வாரம் ஒருநாள் (திங்கட்கிழமை) மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும். நீலநிற கால்சட்டை அல்லது பாவாடை, வெள்ளை நிற மேல்சட்டை அணிந்து வரவேண்டும்.

1964-1965-க்கு முன்பு சில தனியார் பள்ளிகளில் சீருடை அணியும் பழக்கம் இருந்தது. ஆனால் தற்போது அரசு பள்ளிகளை பொறுத்தவரையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே நிறத்தில் சீருடைகள் உள்ளன. அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும், ஒவ்வொரு நிறத்தில் சீருடை முறை இருந்து வருகிறது. அதேபோல், தனியார் பள்ளி நிர்வாகங்கள் விரும்பும் நிறத்தில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சீருடை முறைகளை வைத்து உள்ளனர். இந்தநிலையில், பள்ளிகளில் சீருடை அணியும் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா? சமத்துவப்பார்வையில் சீருடை அணியப்படுகிறதா? அல்லது நாகரிக நோக்கில் அணியப்படுகிறதா? என்பவை குறித்து ஆசிரியர்கள், இல்லத்தரசிகள் மற்றும் மாணவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

கட்டண சுமை அதிகரிக்கும்

குழந்தை தெரஸ் (இல்லத்தரசி, திண்டுக்கல்):- முன்பெல்லாம் பள்ளிகளுக்கான சீருடைகளை நாம் தான் வாங்கி தைத்து பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும். அப்போது பள்ளி நிர்வாகம் தெரிவித்த நிறத்தில் சீருடை வாங்குவதற்காக கடை, கடையாக ஏறி, இறங்க வேண்டும். ஆனால் தற்போது நிலை அப்படியில்லை தங்கள் பள்ளிக்கான சீருடை விற்கப்படும் கடைகளின் விவரங்களை பள்ளி நிர்வாகத்தினரே கொடுத்துவிடுகின்றனர்.

சில பள்ளிகளில் கல்வி கட்டணத்துடன் சீருடை தைத்து கொடுப்பதற்கான கட்டணத்தையும் வசூலிக்கின்றனர். இதுபோன்ற பள்ளிகளில் மாணவர்கள் சீருடைகளை ஒழுக்க கேடாக போட வாய்ப்பு இல்லை. ஆனால் பெற்றோருக்கு தான் கட்டண சுமை அதிகரிக்கும். அதேநேரம் மாணவர்கள் சீருடைகளை முறையாக தைத்து போடுகிறார்களா? என்று பெற்றோர் கவனிக்க வேண்டும்.

மிடுக்கான உடை

சகாய செல்வராஜ் (தொடக்கப்பள்ளி ஆசிரியர், திண்டுக்கல்):- மாணவர்கள் அணியும் சீருடை அவர்களை மிடுக்காக காட்சிப்படுத்தும். இவ்வாறு மிடுக்கான உடை அணிவது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும். மிடுக்கான உடை அணிபவர்கள் பலரின் கவனத்தை கவர்ந்துவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

எனவே பள்ளி நிர்வாகம் கூறும் நிறத்தில், வடிவத்தில் மாணவர்கள் சீருடையை தைத்து அணிந்துகொள்வதே சிறந்தது. அதுவே அவர்களின் வெற்றிக்கு காரணமாக அமையும். நாகரிகம் என்ற பெயரில் உடைகளில் மாற்றம் செய்து அணிவது, சிகை அலங்காரத்தை மாற்றுவது போன்ற செயல்கள் அவர்களின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

மாற்றம் செய்யாமல்...

சச்சின் (10-ம் வகுப்பு மாணவர், திண்டுக்கல்):- மாணவர்கள் அனைவரும் வேறுபாடு இன்றி சமமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சீருடை முறை பள்ளிகளில் உள்ளது. நாகரிகம் என்ற பெயரில் நாம் அணியும் சீருடையில் கால், கை பகுதிகளில் இறுக்கமாக தைத்து போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என எனது தந்தை அறிவுறுத்துவார். அதனால் நான் பள்ளி சீருடையில் எந்த மாற்றமும் செய்யாமல் தைத்து அணிந்துகொண்டேன். எனது நண்பர்களையும் அதுபோல் பின்பற்ற அறிவுறுத்தினேன். மேலும் இறுக்கமான உடை அணிவதால் நோய்கள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

சுகைனா பேகம் (உதவி தலைமை ஆசிரியை, சிறுகுடி அரசு மேல்நிலைப்பள்ளி):- மாணவர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்பதற்காகவே சீருடை முறை கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு பள்ளி நிர்வாகத்தினர் கூறும் நிறங்களில் மாணவ-மாணவிகள் சீருடைகளை தைத்து அணிகின்றனர். ஆனால் அதன் வடிவமைப்பில் சில மாற்றங்களை சிலர் செய்கின்றனர். குறிப்பாக கை, கால் பகுதிகளில் இறுக்கமாக தைத்து அணிகின்றனர். மேலும் தங்களின் சிகை அலங்காரத்திலும் பல்வேறு மாற்றங்களை செய்வதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இதனால் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தும் போது அவற்றை கவனிக்க வேண்டும், குறிப்பெடுக்க வேண்டும், வீட்டுக்கு சென்று பாடங்களை திரும்ப படிக்க வேண்டும் என்ற மனநிலை குறைந்து வருகிறது. எனவே பள்ளி நிர்வாகத்தினர் கூறும் முறையில் மாணவர்கள் சீருடைகளை தைத்து அணிய வேண்டும்.

விருப்பம் இல்லை

சண்முகபிரியா (பிளஸ்-1 மாணவி, சிறுகுடி):- பள்ளி நிர்வாகம் கூறிய நிறத்திலும், வடிவத்திலும் சீருடை தைத்து அணிந்து பள்ளிக்கு சென்று வருகிறேன். சீருடையுடன் எங்களை பார்க்கும் போது மற்றவர்களுக்கு தனி மதிப்பு ஏற்படுகிறது. பள்ளி நிர்வாகம் அறிவுறுத்திய முறையை தவிர்த்து மற்ற முறையில் சீருடையை தைக்க எங்கள் பெற்றோரும் அனுமதிக்க மாட்டார்கள். எனக்கும் அதுபோன்று சீருடையை தைத்து அணிவதில் விருப்பம் இல்லை. மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் எந்த செயலையும் பள்ளி பருவகாலத்தில் செய்துவிட கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அரசு முடிவு

தமிழக கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, 'அரசு உத்தரவுப்படி அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்காக ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டு பள்ளி தொடங்குவதற்கு முன்பாக அந்தந்த பள்ளிகளுக்கு கொண்டு வழங்கப்படுகிறது. இதனை பெற்றுக்கொண்ட பள்ளி நிர்வாகங்கள் அவர்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடையாக வழங்குகின்றனர். அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான சீருடை அமல்படுத்துவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இதுதொடர்பாக துறையிலும் பெரிய அளவில் எந்த திட்டமும் தற்போது இல்லை.

தமிழக அரசின் 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பள்ளி கல்வி துறைக்கு ரூ.40 ஆயிரத்து 290 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பள்ளிக்கல்வி துறையில் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைப்பதற்கு ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் மூலம் 12.7 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். நவீன விடுதிகள் கட்டவும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று தான் சீருடை, கல்வி உபகரணங்களும் வாங்கி பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் சீருடை வேறு மாதிரி இருப்பதால் அரசு சார்பில் வழங்கப்படும் சீருடைக்கான துணி வேண்டாம் என்கின்றனர். ஆனால் அவர்களுக்கான ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் சீருடை வழங்க முடியாத ஒரு சில மாணவர்களுக்கு அரசு வழங்கும் சீருடைகளும் வழங்கப்படுகிறது' என்றனர்.

சீருடையை அறிமுகப்படுத்திய முதல் பள்ளி

1552-ம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள கிறைஸ்ட் ஹாஸ்பிடல் பள்ளி தான் பள்ளிச் சீருடையைப் பயன்படுத்திய முதல் பள்ளி என்று அறியப்படுகிறது. ஒரு நீண்ட நீல நிற மேல் அங்கி மற்றும் மஞ்சள் நிறத்தில், முழங்கால் வரையிலான காலுறை ஆகியன மாணவர்களுக்கு சீருடையாக வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட அதே மாதிரியான சீருடை இன்றும் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களால் அணியப்படுகிறது.

சமூக ஆடைகளின் அடையாளங்கள் மாறியுள்ளதால் சமீபத்திய ஆண்டுகளில் சீருடைகளும் மாறிவருகின்றன என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.


Related Tags :
Next Story