முருகபவனம் குப்பை கிடங்கில் ஆணையர் ஆய்வு


முருகபவனம் குப்பை கிடங்கில் ஆணையர் ஆய்வு
x

பதவி ஏற்ற முதல் நாளில், திண்டுக்கல் முருகபவனம் குப்பைக்கிடங்கில் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சியின் புதிய ஆணையராக ரவிச்சந்திரன் நேற்று காலை பதவி ஏற்றார். முதல் நாளிலேயே தனது பணியை தொடங்கிய ஆணையர், திண்டுக்கல் நகர மக்களின் முக்கிய பிரச்சினையாக உள்ள முருகபவனம் குப்பை கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குப்பைகளை தரம் பிரிக்கும் எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் திண்டுக்கல் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் துப்புரவு பணிக்காக சுகாதார ஆய்வாளர்களான செபாஸ்டின், தட்சிணாமூர்த்தி, தங்கவேல், சீனிவாசன் ஆகியோரை நியமித்து மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு பணிகளை துரிதப்படுத்தினார். பின்னர் மாநகராட்சி கூட்ட அரங்கில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், துப்புரவு வாகன ஓட்டுனர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தினமும் சென்று குப்பைகளை சேகரிக்க வேண்டும். அவ்வாறு சேகரித்தவற்றில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரம் தயாரிக்கும் மையங்களுக்கு அனுப்ப வேண்டும். அதேபோல் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பொருட்களை நாகல்நகரில் செயல்படும் எரியூட்டும் மையத்துக்கு அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Next Story