பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் கைவிட்ட நிறுவனங்கள்'மஞ்சப்பை விருதுகள்' பெற விண்ணப்பிக்கலாம்


பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் கைவிட்ட நிறுவனங்கள்மஞ்சப்பை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 28 Dec 2022 6:45 PM GMT (Updated: 28 Dec 2022 6:45 PM GMT)

பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் கைவிட்டு மாற்று பொருட்களின் பயன்பாட்டுக்கு மாறிய நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மஞ்சப்பை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்.

தேனி

மஞ்சப்பை விருது

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

'மீண்டும் மஞ்சப்பை' பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், தமிழக அரசால் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் (பிளாஸ்டிக்) தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு விருதுகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இது ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் அவற்றுக்கு மாற்றாக பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பை போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 3 சிறந்த பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக வளாகங்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.

ரூ.10 லட்சம்

முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-வது பரிசாக ரூ.5 லட்சமும், 3-வது பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாகத் திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன்வந்துள்ளது.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் https://theni.nic.in என்ற இணையதள முகவரியில் கிடைக்கும். விண்ணப்ப படிவத்தில் தனிநபர் அல்லது நிறுவனத்தின் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் 2 மற்றும் சி.டி. பிரதிகள் 2 ஆகியவற்றை கலெக்டர் அலுவலகம் அல்லது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வருகிற மே மாதம் 1-ந்தேதி கடைசி நாள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story