பெண்ணுக்கு ரூ.55 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்


பெண்ணுக்கு ரூ.55 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 22 Jun 2023 6:45 PM GMT (Updated: 22 Jun 2023 6:46 PM GMT)

பாலிசி நிராகரிப்பு: பெண்ணுக்கு ரூ.55 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு மாவட்ட குறைதீர் ஆணையம் உத்தரவு

கடலூர்

கடலூர்

மேல்புவனகிரி மெயின்ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ். பாத்திர கடை உரிமையாளர். இவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.50 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இதற்காக அதே பெயரை கொண்ட தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 958 பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்திருந்தார். இவர் பாலிசி எடுக்கும் நேரத்தில், கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா நோயால் உயிரிழந்தார். இதையடுத்து அவரது மனைவி கலைவாணி தேவையான ஆவணங்களுடன் காப்பீட்டு நிறுவனத்தை அணுகிய போது, ரமேசுக்கு ஏற்கனவே இருந்த சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களை வெளிப்படுத்த தவறி விட்டதாக கூறி, அவருக்கு காப்பீட்டு தொகையை வழங்காமல் நிராகரித்து விட்டது. இதனால் பாதிக்கப்பட்ட கலைவாணி, இது பற்றி மாவட்ட குறைதீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஆணைய தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில். நேற்று அவர்கள் தீர்ப்பு வழங்கினர். அந்த தீர்ப்பில், பாலிசியை நிராகரித்தது சட்டவிரோதம் என்றும், இறந்தவர் பெற்ற கடனுக்கு இழப்பீடு வழங்கவும், கலைவாணியிடம் பெறப்பட்ட அனைத்து ஆவணங்களையும் திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர். மேலும் சேவை குறைபாடு, மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் கலைவாணிக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்கவும் உத்தரவிட்டனர்.


Next Story